புதுடெல்லி: ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான பூசலால் உலக நாடுகளிடையே போர் குறித்த கவலை நிலவும் வேளையில், இந்தியர்களின் பாதுகாப்புக்குத் தாங்கள் முன்னுரிமை தருவதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
சிரியாவில் தனது தூதரகம் தாக்கப்பட்டதற்குப் பதிலடியாக இஸ்ரேல் மீது ஈரான் 300க்கும் மேற்பட்ட ஏவுகணைகளைப் பாய்ச்சி தாக்குதல் நடத்தியுள்ளது.
மேற்கு ஆசியாவில் அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில் டெல்லியில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) தேசியத் தலைமையகத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 14) தேர்தல் அறிக்கையை வெளியிட்டுத் திரு மோடி உரையாற்றினார்.
“பாஜக அரசு பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும். இது உலகளாவிய சவால்களை வழிநடத்தவும், போர் நடைபெறும் இடங்களில் சிக்கித் தவிக்கும் இந்திய வம்சாவளி மக்களை மீட்கவும் உதவும்.
“போர் குறித்த கவலை உலக நாடுகளை வாட்டும் வேளையில், நாடாளுமன்றப் பெரும்பான்மையுடன் வலுவான அரசாங்கத்தைத் தேர்ந்தெடுப்பது மிகவும் அவசியம்.
“நாட்டின் பொருளியலை வலுப்படுத்தி, உலகளாவிய சவால்களிலிருந்து மீட்சி காணும் திறன்மிக்க அரசாங்கத்தைக் கொண்டிருப்பது அவசியம். வளர்ச்சியடைந்த நாடு என்ற இலக்கை நோக்கி முன்னேற அது உதவும்.
“மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அத்தகைய அரசாங்கத்தை நடத்த பாஜக உறுதிபூண்டுள்ளது,” என்று திரு மோடி தமது உரையில் குறிப்பிட்டார்.