புதுடெல்லி: டெல்லி அரசின் மதுபான கொள்கையில் முறைகேடு தொடர்பாக விசாரணைக் காவலில் உள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்றக் காவல் 23ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 21ஆம் தேதி இரவு கைது செய்யப்பட்ட கெஜ்ரிவால் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரின் நீதிமன்ற காவல் திங்கட்கிழமையுடன் (ஏப்ரல் 15) நிறைவடைந்த நிலையில், அவரது நீதிமன்ற காவலை நீட்டிக்கவேண்டுமென அமலாக்கத் துறை தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அந்தக் கோரிக்கையை ஏற்ற டெல்லி நீதிமன்றம் அவரது நீதிமன்றக் காவலை 23ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக, தேர்தல் பிரசாரங்களில் இருந்து தன்னை தடுப்பதற்காகவே இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பு நீதிமன்றத்தில் வாதத்தை முன்வைத்திருந்தது. இது குறித்துப் பேசிய நீதிபதிகள், ஏப்ரல் 24 க்குள் கெஜ்ரிவால் தரப்பு வாதத்திற்கு அமலாக்கத் துறை பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
அமலாக்கத் துறையின் விளக்கத்திற்கான பதிலை கெஜ்ரிவால் தரப்பு ஏப்ரல் 26க்குள் கொடுக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் கூறியிருக்கிறார்கள். கைதுக்கு எதிரான அந்த வழக்கு ஏப்ரல் 29க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கைது நடவடிக்கையை எதிர்த்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் அமலாக்கத் துறை பதிலளிக்க உச்சநீதிமன்றம் இன்று (ஏப்ரல் 15) உத்தரவிட்டுள்ளது.

