வயநாடு: நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலின் முதற்கட்ட தேர்தல் நாள் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி, தான் போட்டியிடும் கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
திங்கட்கிழமை நடந்த பிரசாரத்தில் அவர் கிட்டத்தட்ட 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனப் பேரணி நடத்தினார்.
வழிநெடுகிலும் திரண்டிருந்த பொதுமக்களும் கட்சித் தொண்டர்களும் ராகுல் காந்திக்கு பெரும் ஆதரவு அளித்தனர்.
இந்நிலையில், இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமை வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி வாகனப் பேரணி நடத்தினார். அப்போது அவர் மோடி அரசாங்கத்தைக் கடுமையாக விமர்சித்தார்.
“இந்திய அரசியல் அமைப்பை அழிக்க பாஜக முயற்சி செய்கிறது. ஆனால், நாட்டின் அரசியல் அமைப்பை காக்க காங்கிரஸ் போராடுகிறது. இந்தியாவின் மிகப்பெரும் தொழில் அதிபர்களின் கருவி போல பிரதமர் நரேந்திர மோடி செயல்படுகிறார். வேலையின்மை, விலைவாசி உயர்வு பிரச்சினை பற்றி மோடி ஒருபோதும் பேசுவது இல்லை” என்றார் ராகுல் காந்தி.
பிரியங்கா பிரசாரம்
ராஜஸ்தான் மாநிலம் தவுசா மாவட்டம் பந்திகுய் நகரிலும் காங்கிரஸ் பொதுக்கூட்டம் நடந்தது. அதில், காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா கலந்து கொண்டார்.
கூட்டத்தில் பேசிய அவர், “பிரதமர் மோடி 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்துள்ளார். பொய் வாக்குறுதிகள் அளித்துள்ளார். இதனால் அவரது பேச்சுகள் வெற்று கூச்சலாக எனக்கு தெரிகிறது.
அரசியல் சட்டத்தில் திருத்தம் செய்வது பற்றி பாஜக பேசி வருகிறது. ஏனென்றால், மக்களின் உரிமைகளை பறிப்பதற்குத்தான் இந்த பிரச்சினையை எழுப்பி வருகிறது. என்ன நடந்தது என்று மக்கள் உணரக்கூட முடியாதவகையில் அதைச் செய்ய பாஜக விரும்புகிறது. பொதுக்கூட்டங்களில் அரசியல் சட்டம் பற்றி மோடி பேசுகிறார். ஆனால், தன் ஆட்களை அழைத்து, மீண்டும் ஆட்சி அமைத்தவுடன் அரசியல் சட்டத்தில் திருத்தம் செய்வது பற்றி பேச வைக்கிறார்” என்று பிரியங்கா குற்றஞ்சாட்டினார்.
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.