புதுடெல்லி: இந்தியாவிலிருந்து இஸ்ரேலுக்கும் துபாய்க்கும் விமானச் சேவையை ஏர் இந்தியா நிறுவனம் தற்காலிகமாக ரத்து செய்துள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளில் நிலையற்ற சூழல் நிலவுவதால் இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்கு இயக்கப்படும் விமானங்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக ஏர் இந்தியா அறிவித்தது.
இதேபோல், துபாயில் கடந்த சில தினங்களுக்கு முன் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ள பாதிப்பால் அந்த நகரத்துக்கான விமானச் சேவையையும் ஏர் இந்தியா ரத்து செய்துள்ளதாக கூறியது.
இதுதொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், புதுடெல்லிக்கும் டெல் அவிவ்வுக்கும் இடையேயான விமானச் சேவைகள் ஏப்ரல் 30ஆம் தேதி வரையும் துபாய்க்கு இயக்கப்படும் விமானங்கள் ஏப்ரல் 21ஆம் தேதி வரையும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தது.
மேலும், விமானச் சேவை மீண்டும் தொடங்கப்பட்டதும் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களின் பயணத்தை உறுதிசெய்யும் வகையிலான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.
ஏற்கெனவே முன்பதிவு செய்த பயணிகளுக்கு பயணக்கட்டணம் ரத்து மற்றும் மறுஅட்டவணையின்போது ஒருமுறை மட்டும் சலுகை அளிக்கும் வகையில் வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.