புவனேஸ்வர்: ஒடிசாவில் படகு ஆற்றில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் ஏழு பேர் உயிரிழந்தனர். காணாமல் போன ஒருவரைத் தேடும் பணி தொடர்ந்தது.
அனுமதிக்கப்பட்ட அளவையும் தாண்டி அதிகமான பயணிகளை ஏற்றிச்சென்றதே இந்த விபத்திற்கான முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஒடிசா மாநிலம், ஜார்சுகுடா மாவட்டத்தில் ஓடும் மகாநதி ஆற்றில் அரசு அனுமதியுடன் ஏராளமான படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்தப் படகுகள் சிலவற்றில் அடிப்படை வசதிகள் போதுமான அளவில் இல்லை எனவும் பாதுகாப்பு அம்சங்கள் கடைப்பிடிக்கப்படுவதில்லை எனவும் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு 7 மணி அளவில் 50க்கும் மேற்பட்ட சுற்றுப் பயணிகள் ஒரே படகில் மகாநதி ஆற்றில் பயணம் செய்துகொண்டிருந்தனர். அப்போது, ஆற்றில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக, படகு நிலைதடுமாறி கவிழ்ந்தது.
சம்பவ இடத்திற்கு வந்த ஒடிசா மாநிலப் பேரிடர் அதிவிரைவுப் படையினர் 40 பேரை பத்திரமாக மீட்டு கரைக்கு அழைத்து வந்தனர்.
எனினும், 10க்கும் மேலானோர் மாயமானதாக மீட்கப்பட்டவர்கள் கூறியதால் அவர்களைத் தேடும் பணி தொடர்ந்தது.
இந்தச் சூழலில், ஞாயிற்றுக்கிழமை காலை வரை 7 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் மாயமான ஒருவரை தேடும் பணிக்காக ஸ்கூபா வீரர்கள் வரவழைக்கப்பட்டு உள்ளதாகவும் மாவட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.
விபத்து குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் கார்த்திகேய கோயல், “ஜார்சுகுடா மாவட்ட நிர்வாகம், மாநில அரசாங்கம் ஆகியவற்றின் உதவியுடன் ஒடிசா மாநிலப் பேரிடர் அதிவிரைவுப் படை காணாமல் போனவர்களைத் தேடும் பணியில் ஈடுபட்டது.
“தேடுதல் நடவடிக்கையில் உதவுவதற்காக புவனேஸ்வரில் இருந்து ஸ்கூபா முக்குளிப்பாளர்கள் வரவுள்ளனர்,” என்று கூறினார்.
இதற்கிடையே, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் இறந்தவர்களின் உறவினர்களுக்கு 4 லட்சம் ரூபாய் நிவாரணத் தொகையை அறிவித்தார்.
உள்ளூர் பாஜக தலைவர் சுரேஷ் பூஜாரி, சரியான உரிமம் இன்றி படகு இயக்கப்பட்டதாகக் குற்றம் சாட்டினார். அத்துடன், படகில் கூட்டம் அதிகமாக இருந்ததாகவும் அதன் கொள்ளளவுக்கும் அதிகமாக பயணிகளை ஏற்றிச் சென்றதாகவும் கூறினார்.
இதனிடையே சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று மாவட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.