திருவனந்தபுரம்: கேரள மாநிலம் முழுவதும் நடத்திய அதிரடி சோதனையில் மது அருந்தி விட்டு அரசுப் பேருந்தை ஓட்டிய ஓட்டுநர்கள், நடத்துநர்கள் என 74 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
கேரள மாநில சாலைப் போக்குவரத்துக் கழகத்தில் (கேஎஸ்ஆர்டிசி) மதுபோதையுடன் பணிபுரியும் ஊழியர்களால் பயணிகளின் உயிருக்கு அச்சுறுத்தல் அதிகமாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதன் காரணமாக 74 நிரந்தர ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மாநிலப் போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.பி.கணேஷ் குமார் கூறியுள்ளார்.
கேரள அரசுப் பேருந்துகளில் ஓட்டுநர்கள் மது அருந்திவிட்டு பணி புரிவதாக புகார்கள் கூறப்பட்டதை அடுத்து, போக்குவரத்துத் துறை அமைச்சர் கணேஷ்குமாரின் உத்தரவுப்படி அரசுப் பேருந்துகளில் காவலர்கள் அதிரடி சோதனையைத் தொடர்ந்தனர்.
கடந்த ஒரு வாரத்தில் நடந்த சோதனையில் 100 பேர் சிக்கினர். இவர்களில் ஓட்டுநர்கள், நடத்துநர்கள் மது அருந்தி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, 74 நிரந்தரப் பணியாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். தற்காலிகப் பணியாளர்கள் 26 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டனர். மதுபோதையுடன் 49 ஓட்டுநர்களும் 31 நடத்துநர்களும் பணிக்கு வந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.