திருவனந்தபுரம்: கேரளா உள்ளிட்ட சில இந்திய மாநிலங்களில் வரும் 26ஆம் தேதி இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. அதனால், கேரளாவில் பிரசார நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன.
கேரளாவில் 20 நாடாளுமன்றத் தொகுதிகள் உள்ளன. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடும் வயநாடு தொகுதியும் அதில் ஒன்று.
இந்நிலையில், தேர்தல் நடத்தை விதிமீறல்கள் குறித்து தேர்தல் ஆணையத்துக்கு ஏராளமான புகார்கள் வந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 16ஆம் தேதி முதல் இம்மாதம் 20ஆம் தேதி வரை 209,661 புகார்கள் வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதில் அங்கீகரிக்கப்படாத சுவரொட்டிகள், பதாகைகள் தொடர்பாக 183,842 புகார்களும், சொத்துக் குவிப்பு தொடர்பாக 10,999 புகார்களும் வந்துள்ளன.
மேலும், பணம், மது, பரிசுப்பொருள் விநியோகம் உள்ளிட்டவை தொடர்பாகவும் புகார்கள் வந்துள்ளன. இந்தப் புகார்கள் குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரி சஞ்சய் கௌல் தெரிவித்துள்ளார்.