திருவனந்தபுரம்: நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவால் கேரளாவில் வெல்ல முடியாது என அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
வரும் வெள்ளிக்கிழமை நடக்கவுள்ள தேர்தலுக்காக காசர்கோட்டில் பிரசாரம் செய்தபோது திரு பினராயி விஜயன் செய்தியாளர்களிடம் அந்தக் கருத்தைக் கூறினார்.
“கேரளாவுக்கு எதிராகப் பேசும்போது பிரதமர் நரேந்திர மோடி, ராகுல் காந்தி ஆகியோர் ஒரே குரல் எழுப்புகின்றனர். நிதி பொறுப்பில் இருந்து கொண்டு பிரதமர் நரேந்திர மோடி பொய் சொல்கிறார்.
“சங்பரிவார் அமைப்புகளை நேரடியாக எதிர்க்க ராகுல் காந்தி முயற்சிக்கவில்லை. கேரளாவில் பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு இல்லை. அதை உணர்ந்து கேரளாவை அவமதித்து பொய்களைக் கூறி வருகிறார் மோடி,” என்று பினராயி விஜயன் குற்றஞ்சாட்டினார்.
பாஜகவை தோற்கடிப்பதே எங்களது நோக்கம். கேரளாவின் ஊழல் பீகார் போன்றது என ஒரே நேரத்தில் இரண்டு மாநிலங்களை பிரதமர் மோடி இழிவுபடுத்தியுள்ளார். கேரள மாநிலத்தின் சாதனைகளை பொய்களால் மூடி மறைக்க முயற்சி செய்கிறார் மோடி,” என்று பினராயி விஜயன் செய்தியாளர்களிடம் கூறினார்.