ராஜஸ்தான்: மத்தியப் பிரதேச மாநிலத்தின் போபால் அருகே நடந்த திருமண விழாவில் பங்கேற்றபின்னர் சனிக்கிழமை இரவு 10 பேர் ஒரு வேனில் சொந்த ஊர் திரும்பிக்கொண்டிருந்தனர்.
அக்லேரா அருகே உள்ள பஞ்சோலாவில் அவர்கள் பயணம் செய்துகொண்டிருந்த வேன் மீது லாரி ஒன்று மோதியதில் ஒன்பது பேர் உயிரிழந்தனர். காயமடைந்தவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பலியானவர்கள் அனைவரும் பக்ரி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்று அக்லேரா காவல் நிலையப் பொறுப்பாளர் சந்தீப் பிஷ்னோய் தெரிவித்தார்.
ஜலாவர் காவல் ஆய்வாளர் ரிச்சா தோமர் கூறுகையில், “10 பேர் கொண்ட குழு மத்தியப் பிரதேசத்தின் போபால் அருகே நடந்த திருமணத்துக்குச் சென்று திரும்பிக் கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டது. மூவர் சம்பவ இடத்திலேயே பலியாகினர், ஆறு பேர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தனர்.
“உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது,” எனத் தெரிவித்தார்.
“வேனில் இருந்த 10 பேரில் 9 பேர் இறந்தனர், ஒருவர் படுகாயமடைந்து சிகிச்சை பெறுகிறார். லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டார். வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது,” என்று ஏஎஸ்பி சிரஞ்சி லால் மீனா தெரிவித்துள்ளார்.