திருப்பதி: ஆந்திர மாநிலம், விஜயவாடாவில் கடந்த வாரம் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி பேருந்தில் இருந்தபடி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது சந்தேகப் பேர்வழிகள் சிலர் அவர் மீது கற்களை வீசி தாக்கினர். இதில் ஜெகன்மோகன் ரெட்டியின் கண் புருவத்திற்கு மேல் காயம் ஏற்பட்டது.
இந்தச் சம்பவம் தொடர்பில், தெலுங்கு தேசம் கட்சி பிரமுகர் வெமுலா துர்கா ராவ் மற்றும் சதீஷ் ஆகியோரைக் கைது செய்து, கடந்த 4 நாள்களாக மறைவான இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், ஆந்திர நீதிமன்றத்தில் துர்கா ராவின் மனைவி ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்ய முடிவு செய்திருந்த சூழலில், துர்கா ராவை காவலர்கள் விடுவித்தனர்.
இதுகுறித்து துர்கா ராவ் கூறுகையில், “கல்வீச்சு சம்பவத்திற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனக் காவலர்களிடம் பலமுறை கூறியும் அவர்கள் காதில் வாங்கிக்கொள்ளவில்லை.
“துப்பாக்கியைக்காட்டி குற்றத்தை ஒப்புக்கொள்ளுமாறு வற்புறுத்தினர். அதன்பின்னர் என்னிடம் எழுதி வாங்கிக்கொண்டு விடுவித்தனர்,” எனத் தெரிவித்தார்.