புதுடெல்லி: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கப் பதிவில், “நரேந்திர மோடியின் ஆட்சியில் ரயிலில் பயணம் செய்வதுகூட தண்டனையாகிவிட்டது,” எனக் குற்றம்சாட்டியுள்ளார்.
“ரயில்களில் சாமானிய மக்கள் பயணிக்கும் பொதுப் பெட்டிகளின் எண்ணிக்கையைக் குறைத்து, ‘எலைட் ரயில்களை’ மட்டுமே மோடி அரசு ஊக்குவித்து வருகிறது. இதனால் மோடி அரசில் ஒவ்வொரு வகுப்பு பயணிகளும் துன்புறுத்தப்படுகிறார்கள்,” என்றார் அவர்.
“முன்பதிவு செய்து கட்டணச் சீட்டுகளைப் பெற்றபிறகும் மக்களால் தாங்கள் விரும்பியவண்ணம் தங்கள் இருக்கைகளில் வசதியாக உட்கார்ந்து செல்ல முடியவில்லை.
“சாமானியர்கள் தரையிலும் கழிவறைகளிலும் பதுங்கியிருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்,” எனச் சுட்டிக்காட்டியுள்ள ராகுல் காந்தி, “மோடி அரசு தன் கொள்கைகள் மூலம் ரயில்வேயை பலவீனப்படுத்தி, அதனைத் திறமையற்றதாக நிரூபிக்க விரும்புகிறது.
“சாமானியர்களின் பயணத்தைக் காப்பாற்ற வேண்டுமானால் ரயில்வே துறையை பாழ்படுத்துவதில் மும்முரமாக இருக்கும் மோடி அரசை அகற்றவேண்டும்,” என்று காட்டமாகக் குறிப்பிட்டுள்ளார் ராகுல் காந்தி.