ராஞ்சி: நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் உள்பட கிட்டத்தட்ட 28 கட்சிகள் ‘இண்டியா’ கூட்டணி என்ற பெயரில் இணைந்து போட்டியிடுகின்றன. இந்த கட்சிகள் சார்பில் கூட்டு பிரசாரமும் நடந்து வருகிறது. அந்த வகையில் ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் ஞாயிற்றுகிழமை ‘இண்டியா’ கூட்டணியின் பிரம்மாண்ட பிரசார பொதுக்கூட்டம் நடந்தது.
‘புரட்சி நீதி’ என்ற பெயரில் நடந்த இந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராஷ்ட்ரீய ஜனதாதள தலைவர் தேஜஸ்வி உள்ளிட்ட கூட்டணித் தலைவர்கள் கலந்துகொண்டனர். மேலும் சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ், பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் சிங் மன், தேசிய மாநாடு கட்சித்தலைவர் பரூக் அப்துல்லா, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் சிபுசோரன் ஆகியோரும் பங்கேற்றனர். ராகுல் காந்திக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அவர் இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
சிறையில் இருக்கும் இந்த கூட்டணித் தலைவர்களான ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா செயல் தலைவர் ஹேமந்த் சோரன் ஆகியோருக்காக மேடையில் 2 காலி இருக்கைகள் போடப்பட்டு இருந்தன. அதேநேரம் அவர்களின் மனைவியர் இருவரும் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.
“இந்தியா கூட்டணியில் இருந்து விலகாததால் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டார். ஆனால் ஹேமந்த் சோரன் ஒரு துணிச்சலான நபர், அவர் தலைவணங்குவதை விட சிறை செல்வதையே விரும்பினார்,” எனக் கூட்டத்தில் பேசிய மல்லிகார்ஜுன கார்கே கூறினார்.
ராமர் கோவில் பிரதிஷ்டைக்கு அழைக்காமல் அதிபர் திரெளபதி முர்முவையும், பழங்குடியினரையும் பிரதமர் மோடி அவமதித்து விட்டார் என்றார் கார்கே.
இந்த கூட்டத்தில், சிறையில் இருக்கும் ஹேமந்த் சோரன் அனுப்பிய செய்தியை, அவரது மனைவி கல்பனா சோரன் வாசித்தார்.
“எதிர்க்கட்சிகளின் குரலை ஒடுக்குவதற்கு அமலாக்கத்துறை, சிபிஐ போன்ற மத்திய விசாரணை அமைப்புகள் தவறாக பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் ஜனநாயகம் வீழ்ச்சியடைய அனுமதிக்கக்கூடாது. பா.ஜனதாவும், அந்த சக்திகளும் ஜார்க்கண்டில் இருந்து வெளியேற்றப்படுவார்கள்,” என ஹேமந்த் சோரன் அதில் கூறியிருந்தார்.
இந்த கூட்டத்தில் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா உரையாற்றினார். அப்போது திகார் சிறையில் கெஜ்ரிவாலை கொல்ல சதி நடப்பதாக குற்றம் சாட்டினார்.