பன்ஸ்வாரா: காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், இந்தியாவின் வளத்தை இஸ்லாமியர்களிடம் வழங்கும் என்று பிரதமர் மோடி பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் பேசியுள்ளார். ராஜஸ்தானில் உள்ள பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி பேரணி சென்றார்.
அப்போது அவர்,“இதற்கு முன்பாக காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, இஸ்லாமியர்களுக்குத்தான் அதிக முன்னுரிமை வழங்கப்படும்,” என்று பேசினார்.
மேலும் பேசிய அவர்,“ நமது வயதான தாய்மார்கள் மற்றும் மகள்களின் சொத்தை எடுத்து, இஸ்லாமியர்களுக்கு வழங்குவதாக காங்கிரஸ் தேர்தல் அறிக்கை சொல்கிறது. சகோதர சகோதரிகளே, இந்த நக்சல் மனநிலை, நமது தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் தாலியை கூட விட்டுவைக்காது.
“இந்திய அரசியலமைப்பு சட்டம் தொடர்பாக காங்கிரஸ் கட்சி பொய்களை பரப்புகிறது. அவர்கள் பழங்குடியினர், தலித் அல்லது சிறுபான்மையர் மத்தியில் பயத்தை உருவாக்குவார்கள். இந்நிலையில் அவர்கள் கூறும் பொய்கள் எப்போதும் உதவது இல்லை. பழங்குடியினருக்கு அவர்களது உரிமையை பற்றி தெரிந்திருக்கிறது,” என்றார் மோடி.
ராஜஸ்தானில் உள்ள ஜலோரில், பேசிய மோடி “ தேர்தலில் வெற்றி பெற முடியாத, நபர்களை, ராஜஸ்தானிலிருந்து மாநிலங்களவைக்கு காங்கிரஸ் அனுப்புகிறது. மூத்த காங்கிரஸ் தலைவர் வேணுகோபால் என்பவர் 2020ல் ராஜஸ்தானில் இருந்துதான் தேர்வு செய்யப்பட்டார். இதுபோல மன்மோகன் சிங் மற்றும் சோனியா காந்தி ஆகியோரும் இங்கிருந்துதான் தேர்வு செய்யப்பட்டனர்” என்று கூறினார்.
மேலும் பேசிய அவர் “ ஒரு காலத்தில் 400 இடங்களை வென்ற காங்கிரஸ், தற்போது 300 இடங்களில் கூட போட்டியிட முடியவில்லை. இண்டியா கூட்டணி ஒரு சந்தர்ப்பவாத கூட்டணி” என்று அக்கூட்டணியை சாடினார்.