சிங்கப்பூரில் மீட்டுக்கொள்ளப்பட்ட எவரெஸ்ட் மீன் குழம்பு மசாலா: இந்திய அரசு நடவடிக்கை

சிங்கப்பூரில் மீட்டுக்கொள்ளப்பட்ட எவரெஸ்ட் மீன் குழம்பு மசாலா: இந்திய அரசு நடவடிக்கை

1 mins read
11bbce81-a63d-4fab-8932-045849c2332f
மீட்டுக்கொள்ளப்பட்ட எவரெஸ்ட் மீன் குழம்பு மசாலா. - படம்: சிங்கப்பூர் உணவு அமைப்பு

புதுடெல்லி: இந்தியாவில் உள்ள அனைத்து உற்பத்தியாளர்களிடம் இருந்தும் மசாலா பொருள்களின் மாதிரிகளைச் சேகரிக்க உணவு ஆணையர்களுக்கு இந்திய அரசு உத்தரவிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரபலமான இரு இந்திய மசாலா பொருள் சின்னங்களான எம்டிஎச், எவரெஸ்ட்டில் குறிப்பிட்ட சில தயாரிப்புகளில் புற்றுநோயை ஏற்படுத்தும் மூலப்பொருள் இருந்ததாக ஹாங்காங்கிலும் சிங்கப்பூரிலும் உணவு ஒழுங்குமுறை அமைப்புகள் சிவப்புக் கொடி காட்டியதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு இறக்குமதி செய்யப்பட்ட எவரெஸ்ட் மீன் குழம்பு மசாலாவில் பூச்சிக்கொல்லி வேதிப்பொருள் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக இருப்பதாக சிங்கப்பூர் உணவு அமைப்பு அண்மையில் தெரிவித்திருந்தது.

“நாட்டில் உள்ள அனைத்து உணவு ஆணையர்களுக்கும் இதுகுறித்து தெரியப்படுத்தப்பட்டுள்ளது. மசாலா பொருள்களின் மாதிரிகளைச் சேகரிக்கும் நடைமுறை தொடங்கிவிட்டது.

“இன்னும் மூன்று, நான்கு நாள்களில் நாட்டில் உள்ள அனைத்து உற்பத்தியாளர்களிடம் இருந்தும் மசாலா மாதிரிகள் சேகரிக்கப்படும்.ஏறக்குறைய 20 நாள்களில் ஆய்வகத்திலிருந்து அறிக்கை வெளிவரும்,” என்று உயர்மட்ட அரசாங்க தரப்பு தெரிவித்தது.

“இந்திய மசாலா பொருள்களில் உடல்நலத்திற்குக் கேடு விளைவிக்கும் மூலபொருள்கள் இருப்பது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். குற்றவியல் நடவடிக்கை எடுக்க சட்டத்தில் இடம் உண்டு,” என்றும் அத்தரப்பு கூறியது.

குறிப்புச் சொற்கள்
எவரெஸ்ட்குழம்புஉணவு