புதுடெல்லி: பிரதமர் மோடி ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 21) முஸ்லிம்களுக்கு எதிராக ஊடுருவியவர்கள் என்ற கருத்தை முன்வைத்தார். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.
இது தொடர்பாக தேர்தல் ஆணையம் மௌனம் காப்பது ஏன்? உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து இது தொடர்பாக வழக்கு தொடர்ந்து விசாரணை நடத்த வேண்டும் என்று தங்களது கண்டனத்தைத் தெரிவித்தனர்.
இந்நிலையில் பிரதமர் மோடி பேசியது தொடர்பாக புகார் கிடைக்கப்பெற்றோம். புகார் பரிசீலனையில் உள்ளது என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மோடி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தேர்தல் ஆணையத்துக்கு ஏற்கனவே 20,000க்கும் மேற்பட்டோர் மின்னஞ்சல் மூலம் அளித்த புகார் மனு சென்றுள்ளது. மேலும், வெறுப்பைப் பரப்பும் வகையில் பேசிய பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகள் ஏற்கெனவே புகார் அளித்துள்ளன.
முன்னதாக பிரதமர் மோடி தமது பேச்சில் கூறியதாவது:- “இது நகர்ப்புற நக்சல் மனநிலை. தாய்மார்கள், சகோதரிகளே. அவர்கள் உங்களுடைய மங்கல்சூத்ராவை (தாலி) கூட விட்டு வைக்கமாட்டார்கள். அவர்கள் அந்த நிலைக்குக்கூட போவார்கள்.
“தாய்மார்கள், சகோதரிகள் வைத்துள்ள தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு, தகவல்கள் பெறப்பட்டு, பகிர்ந்து கொடுப்போம் என காங்கிரஸ் தேர்தல் அறிக்கை சொல்கிறது.
“அவர்கள் யாருக்கு பகிர்ந்து அளிப்பார்கள். முந்தைய மன்மோகன் சிங் அரசு, நாட்டின் சொத்துகளில் முஸ்லிம்களுக்கே முதல் உரிமை எனத் தெரிவித்திருந்தது.
“இதன் அர்த்தம் யாருக்கு சொத்து பகிர்ந்தளிக்கப்படும்? அதிக குழந்தைகளை வைத்திருப்பர்களுக்கிடையே பகிர்ந்து அளிக்கப்படும். இந்திய நாட்டுக்குள் ஊடுருவியவர்களுக்கு பகிர்ந்து அளிக்கப்படும். உங்களுடைய கடின உழைப்பால் சம்பாதித்த பணம், ஊடுருவியவர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா?
“இது உங்களுக்கு ஏற்கத்தக்கதா? நீங்கள் கடுமையாக உழைத்து சம்பாதித்த உங்கள் சொத்தைப் பறிமுதல் செய்ய அரசுகளுக்கு உரிமை உள்ளதா? நம் தாய், சகோதரிகளிடம் இருக்கும் தங்கம் வெளியில் காட்டிக் கொள்வதற்காக அல்ல, அது அவர்களின் சுயமரியாதை சம்பந்தப்பட்டது.
அவர்களின் மங்கல்சூத்திராவின் (தாலி) மதிப்பு தங்கத்திலோ அல்லது அதன் விலையிலோ இல்லை, வாழ்க்கையில் அவர்களின் கனவுகளுடன் தொடர்புடையது. அதையும் பறிப்பது பற்றி நீங்கள் பேசுகிறீர்களா,” என்று பிரதமர் மோடி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.