லக்னோ: திருமண நிகழ்ச்சிக்குச் சென்ற மாநில அமைச்சர் சஞ்சய் நிஷாத் மீது ஒரு கும்பல் தாக்குதல் நடத்தியது. இதில் அவரது மூக்கு உடைந்து ரத்தம் கொட்டியது. இதையடுத்து அவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் அமைச்சராக உள்ள சஞ்சய் நிஷாத்தும் எம்.பி.யாக உள்ள அவரது மகனும் மக்களுக்கும் தொகுதிக்கும் எந்த நன்மையும் செய்யவில்லை என்று தாக்குதல் நடத்தியவா்கள் குற்றம்சாட்டினா்.
பாஜக கூட்டணியில் உள்ள சஞ்சய் நிஷாத், மீன்வளத்துறை அமைச்சராக பதவி வகித்து வருகிறாா்.
ஞாயிற்றுக்கிழமை இரவு முகமதுபூா் கத்தாா் கிராமத்தில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு அமைச்சா் சஞ்சய் நிஷாத் தனது ஆதரவாளா்கள் புடைசூழ சென்றிருந்தார்.
அப்போது இந்தத் தாக்குதல் சம்பவம் நடந்தது.
இதுதொடா்பாக அமைச்சா் சஞ்சய் நிஷாத் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘நான் நிஷாத் சமூகத்தினரின் தலைவராகவும் உள்ளேன். எனது கட்சியைச் சார்ந்தோரின் அனைத்து திருமணங்களுக்கும் செல்வது வழக்கம்.
“வழக்கம்போல் ஒரு திருமணத்துக்குச் சென்றபோது எனக்குப் பின்னால் இருந்த சிலா் என்னைப் பற்றியும் எம்.பி.யாக உள்ள எனது மகன் தொகுதிக்கே வருவதில்லை என்றும் கூறி அவதூறாகப் பேசினா்.
“இதையடுத்து, அவா்களை முன்னால் வந்து பேச அழைத்தேன். அப்போது அவா்களில் ஒருவர் என் முகத்தில் பலமாகத் தாக்கினாா். இதில் எனது மூக்கு உடைந்தது, கண் கண்ணாடியும் சிதறியது. இதைடுத்து, எனது கட்சியினா் என்னை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா்.
“என்மீது யாதவ சமூகத்தைச் சேர்ந்த 20 முதல் 25 போ் வரை திட்டமிட்டு தாக்குதல் நடத்தினா். தோ்தல் நேரத்தில் ஜாதி மோதலைத் தூண்ட எதிா்க்கட்சியினா் முயற்சி செய்கின்றனா். இது தொடா்பாக காவல்துறையிடம் புகாா் அளித்துள்ளோம்,” என்றாா்.