அமராவதி: தனது அண்ணனும் ஆந்திர முதல்வருமான ஜெகன்மோகன் ரெட்டியிடம் ரூ.100 கோடி அளவுக்கு கடன் வாங்கி இருப்பதாக அவரது தங்கை ஒய்.எஸ்.சர்மிளா வேட்புமனுவுடன் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்துள்ளார்.
தெலுங்கானாவில் தனிக்கட்சி நடத்தி வந்த சர்மிளா, சில மாதங்களுக்கு முன்பு தனது கட்சியை காங்கிரசுடன் இணைத்தார்.
இதையடுத்து, காங்கிரஸ் கட்சி சர்மிளாவை அம்மாநில காங்கிரஸ் தலைவராக நியமித்தது.
அத்துடன், ஆந்திர மாநிலம், கடப்பா நாடாளுமன்றத் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளராகவும் அவர் நிறுத்தப்பட்டுள்ளார்.
இந்நிலையில், கடப்பா தொகுதிக்கான வேட்புமனுவை சர்மிளா தாக்கல் செய்தபோது, அதில் தனது சொத்துகள் குறித்தும் கடன் விவரங்கள் குறித்தும் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தார்.
அதில், தன் பெயரில் ரூ.133 கோடி சொத்துகளும் தன் கணவர் அனில்குமார் பெயரில் ரூ.49 கோடி சொத்துகளும் என மொத்தம் ரூ.182 கோடிக்கு சொத்துகள் இருப்பதாக சர்மிளா தெரிவித்துள்ளார்.
அதேசமயத்தில் தனது அண்ணன் ஜெகன்மோகன் ரெட்டியிடம் தான் ரூ.82 கோடி கடன்பட்டிருப்பதாகவும் அவரது மனைவி பாரதி ரெட்டியிடம் ரூ.19 லட்சத்து 56 ஆயிரம் கடன் என ரூ.100 கோடிக்கு மேல் கடன் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து சர்மிளா கூறுகையில், “சமூகத்தில் எந்த ஒரு அண்ணனும் சொத்தில் தன் சகோதரிக்கு உரிய பங்கை அளிக்க வேண்டும். அது அவனது கடமை. சகோதரியின் உரிமை.
“ஆனால், சிலர் இதுபோல் உரிய பங்கை சகோதரிக்கு கொடுத்துவிட்டு, அதைக் ‘கடன்’ என்று கணக்கு காட்டுகிறார்கள்,” என்று கூறியுள்ளார்.
இதனிடையே, புலிவேந்துலா தொகுதியில் போட்டியிடும் ஜெகன் மோகன் ரெட்டி தாக்கல் செய்துள்ள வேட்புமனுவில் தனது சொத்து மதிப்பு ரூ.529 கோடி என குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2019ஆம் ஆண்டு தேர்தலின்போது ரூ.375.20 கோடியாக இருந்த அவரது சொத்து மதிப்பு, கடந்த 5 ஆண்டுகளில் 41% அதிகரித்துள்ளது. அவரது மனைவி பாரதிக்கு ரூ.176.30 கோடி சொத்துகளும் 6.5 கிலோ தங்க, வைர நகைகளும் இருப்பதாகத் தெரிய வந்துள்ளது.