இம்பால்: மணிப்பூரின் காங்போக்பி மாவட்டம், தேசிய நெடுஞ்சாலை எண் 2ல் உள்ள பாலத்தில் ஏப்ரல் 24ஆம் தேதி புதன்கிழமை அதிகாலை 1 மணியளவில் கண்ணிவெடி வெடித்து சிதறியதில் பாலம் சேதமடைந்தது.
இந்தச் சம்பவம் அதிகாலை நேரத்தில் ஏற்பட்டதால் உயிர்ச்சேதம் ஏதுவும் ஏற்படவில்லை. கண்ணிவெடி வெடித்த சில நிமிடங்களுக்கு பிறகு, காவல்துறை சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பாலத்தை சுற்றி வளைத்தனர். மேலும் இந்தச் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “மணிப்பூரின் காங்போக்பி மாவட்டத்தின் சபர்மெயினா மற்றும் கொப்ரு லேக் பகுதியில் உள்ள பாலத்தில் நேற்று அதிகாலை 12.45 மணியளவில் கண்ணிவெடி வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது.
“இதனால் பாலத்தின் இரு முனைகளிலும் 3 பள்ளங்கள் மற்றும் விரிசல்கள் காணப்பட்டது. இதையடுத்து மணிப்பூரின் தலைநகர் இம்பாலையும் திமாபூரையும் இணைக்கும் பாலத்தில் கனரக வாகனங்களின் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
“இந்த சம்பவம் இம்பால் மேற்கு மாவட்டத்தில் 2 சமூகங்களின் கிராம தன்னார்வலர்களுக்கு இடையே நடந்த துப்பாக்கி சண்டைக்கு சில மணிநேரத்திற்குப் பிறகு இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது,” என்றார்.