பாட்னா: இந்தியாவில் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளக் கட்சியைச் சேர்ந்த இளையர் பிரிவுத் தலைவர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
செளராப் குமார் எனும் அந்த ஆடவர், புதன்கிழமை (ஏப்ரல் 24) இரவு பாட்னாவில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியிலிருந்து திரும்பி வந்துகொண்டிருந்தபோது கொல்லப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
செளராபுடன் இருந்த மற்றொரு நபரான முன்முன் குமார், பர்சா பஸார் கிராமத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்ததாக புன்புன் பகுதி காவல் நிலையத்தில் பணியில் இருந்த ஆர். சிங் எனும் அதிகரி கூறினார்.
மோட்டார்சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத ஆடவர் நால்வர் செளராபின் தலையில் இருமுறை சுட்டனர். முன்முன் குமார் மூன்று முறை சுடப்பட்டார்.
இருவரும் அவசரமாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அங்கே செளராப் மாண்டுவிட்டதை மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர். கவலைக்கிடமான நிலையில் இருந்த முன்முன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
கொலை நடந்ததைத் தொடர்ந்து ஆத்திரமடைந்த உள்ளூர்வாசிகள் சாலை மறியலில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
சம்பவம் குறித்த காவல்துறை விசாரணை தொடர்கிறது. மேல்விவரங்கள் பின்னர் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.