புதுடெல்லி: தேர்தல் விதிமுறைகளை மீறியதாக எழுந்த புகார்களுக்கு விளக்கமளிக்கும்படி பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஆகியோருக்குத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஏப்ரல் 29-ம் தேதி காலை 11 மணிக்குள் விளக்கம் அளித்திருக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.
பிரதமர் மோடி ராஜஸ்தானில் பேசியது தொடர்பாக காங்கிரஸ் கட்சியினர் அளித்த புகார்கள் குறித்து தேர்தல் ஆணையம் ஆய்வு செய்து வருவதாக தகவல்கள் வெளியான நிலையில் விளக்கம் கேட்டு தற்போது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பிரதமரின் பேச்சு பிரிவினையை தூண்டுவதாகவும் தவறானதாகவும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை மட்டுமே குறிவைப்பதாகவும் இருந்ததாக காங்கிரஸ் கூறியிருந்தது.
இந்த புகாரின் அடிப்படையில் பிரதமர் மோடி விளக்கமளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் தற்போது உத்தரவிட்டுள்ளது. நாட்டில் வறுமை அதிகரிப்பு குறித்து ராகுல் காந்தி தவறான கூற்றை கூறி வருகிறார் என்றும் தேர்தல் சூழலை சீர்குலைப்பதற்காக மொழி மற்றும் வட்டாரத்தின் அடிப்படையில் நாட்டில் வடக்கு-தெற்கு பிரிவினையை ராகுல் காந்தி உருவாக்கி வருகிறார் என்றும் பாஜக அவர்மீது ஆணையத்திடம் புகார் அளித்தது.
இது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என ராகுல் காந்திக்கும் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தேர்தல் ஆணையம் வெளியிட்ட உத்தரவில், “வேட்பாளர்கள், குறிப்பாக நட்சத்திர பேச்சாளர்களின் பிரசார நடத்தைக்கு அரசியல் கட்சிகள்தான் முதன்மை பொறுப்பை ஏற்க வேண்டும். உயர் பதவிகளில் இருப்பவர்களின் பிரசார உரைகள் மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது,” எனத் தெரிவித்தது.
மேலும், தேர்தல் விதிமீறல் புகார் தொடர்பாக உரிய விளக்கம் அளிக்க வேண்டும்” என்றும் அதில் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.
முதல்கட்டமாக பாஜகவின் புகார் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கும், காங்கிரஸின் புகார் பாஜக தலைவர் ஜெபி நட்டாவுக்கும் அனுப்பிவைக்கப்பட்டது.