மும்பை: நாடாளுமன்றத் தேர்தல் கடந்த 19ஆம் தேதி முதல் ஏழு கட்டங்களாக நடந்து வருகிறது.
மும்பையில் மே 20ஆம் தேதி நடைபெறும் வாக்குப்பதிவை ஒட்டி, 85 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் வசிக்கும் வீடுகளுக்குச் சென்று தபால் வாக்கைப் பதிவு செய்யும் பணிகளுக்கு இந்தியத் தேர்தல் ஆணையம் ஏற்பாடுகளைச் செய்திருந்தது.
இந்நிலையில், காஞ்சன்பென் பாட்ஷா என்ற 112 வயது மூதாட்டி தான் தபால் வழி வாக்களிக்க விம்பவில்லை என்றும் வாக்குச் சாவடிக்கு நேரடியாக வந்து வாக்களிக்கவே விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
1912ஆம் ஆண்டு பிறந்த காஞ்சன்பென் பாட்ஷாவுக்குத் திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளனர். கணவர் இளம்வயதிலேயே காலமாகிவிட்டார். தற்போது அவர் பரிந்த், ஜிக்னேஷ் ஆகிய இரு பேரன்களுடன் தெற்கு மும்பையின் பிரீச் கேண்டி பகுதியில் வசித்து வருகிறார்.
காஞ்சன்பென் குறித்து அவரது பேரன் பரிந்த் கூறுகையில், “வீட்டில் இருந்து வாக்களிப்பது யாருக்கும் பயனளிக்காது என்பதால் நேரடியாக வாக்குச்சாவடிக்குச் சென்று வாக்களிப்பதையே என் பாட்டி விரும்புகிறார்.
“இந்த வயதிலும் நேரில் வந்து வாக்களிப்பதைப் பார்க்கும் மற்றவர்களும் மறவாமல், அலட்சியம் செய்யாமல் தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்ற நினைப்பார்கள். அதுதான் வாக்களிக்க அவர் நேரில் வருவதற்கான முக்கியக் நோக்கம்,” என்று கூறியுள்ளார்.