மல்காஜ்கிரி: தெலுங்கானா மாநிலத்தில் உள்ள 17 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு மே 13ஆம் தேதி தேர்தல் நடக்கிறது.
அதற்கான வேட்பு மனு தாக்கல் இம்மாதம் 18-ந் தேதி தொடங்கியது.
வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாளான வியாழக்கிழமை (ஏப்ரல் 25) ஏராளமானோர் மனு தாக்கல் செய்தனர்.
தெலுங்கானாவில் உள்ள 17 தொகுதிக்கு 890 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
மல்காஜ்கிரி தொகுதியில் மட்டும் அதிகபட்சமாக 114 பேர் மனுத்தாக்கல் செய்தனர்.
அனைத்து வேட்பாளர்களும் போட்டியில் இருந்தால் இந்த தொகுதியில் 8 வாக்கு பதிவு இயந்திரங்கள் பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்படும்.
குறைந்தபட்சமாக அடிலாபாத் தொகுதியில் 23 பேர் மனு தாக்கல் செய்தனர்.
வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 26) மனுதாக்கல் பரிசீலனை செய்யப்பட்டு விதிமுறைகளை பின்பற்றாத வேட்பாளர்களின் மனுக்கள் நிராகரிக்கப்பட உள்ளன.
வருகிற 29ஆம் தேதிக்குள் வேட்பு மனுவை திரும்பப் பெற்றுக் கொள்ள அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. 29ஆம் தேதி மாலை இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.