திருப்பதி: ஆந்திர மாநிலத்தில் வியாழக்கிழமை (ஏப்ரல் 26) வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்தது. இதில் 175 சட்டசபை இடங்களுக்கு 4,210 வேட்பாளர்களும், 25 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 731 பேரும் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
ஆந்திர மாநிலத்தில் சட்டசபை தொகுதிகளுக்கும், 25 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் மே மாதம் 13ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடத்தப்பட உள்ளது.
புலிவேந்துலா தொகுதியில் ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி வேட்பு மனு தாக்கல் செய்தார். மேலும் பாஜக, தெலுங்கு தேசம், ஜனசேனா, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பலர் அவரவர் தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
திருப்பதி கோட்டாட்சியர் அலுவலகத்தில் சந்திரகிரி தொகுதியை சேர்ந்த தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளர் நானி வேட்பு மனு தாக்கல் செய்து விட்டு வெளியே வரும்போது, ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அதே தொகுதி வேட்பாளர் மோஹித் ரெட்டியும் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தார்.
இதனால், இரு பிரிவினருக்கும் இடையே வாக்குவாதங்கள் ஏற்பட்டது, பின்னர் அது கைகலப்பில் முடிந்தது.
காவல்துறையினர் தடியடி நடத்தி இரு பிரிவினரையும் கலைத்தனர்.