ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 99 பேர் வாக்களித்த ருசிகரம்

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 99 பேர் வாக்களித்த ருசிகரம்

1 mins read
fb2a3303-0dbf-4220-ae18-f3599e99c758
99 உறுப்பினர்களைக் கொண்ட ‘பாதாம்’ குடும்பத்தினரில் சிலர். - படம்: இந்திய ஊடகம்

பெங்களூரு: கர்நாடக மாநிலம், பெங்களூரு நகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாத்தா, பாட்டி, மகன்கள், மகள்கள், பேரன்-பேத்திகள் என 99 பேர் ஒரே நேரத்தில் வாக்குச்சாவடிக்கு ஒன்றாக வந்து வாக்களித்து தங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினர்.

இவர்களை அந்தப் பகுதியில் வசிப்பவர்கள் ‘பாதாம் குடும்பத்தினர்’ என்று அழைக்கிறார்கள்.

தேர்தலை ஒரு திருவிழாபோல் கொண்டாடி வரும் இவர்கள், வாக்களிப்பதற்காக வெவ்வேறு ஊர்களில் இருந்து வந்து ஒன்று சேர்ந்திருந்தனர்.

99 வாக்காளர்களுடன் மாவட்டத்தின் 19வது வார்டில் உள்ள சிக்பள்ளாப்பூர் டவுன் வாக்குச்சாவடியில் வெள்ளிக்கிழமை காலை ‘பாதாம் குடும்பத்தினர்’ வாக்களித்தனர்.

அதன்பின், நியூஸ் ட்ரெயில் ஊடகத்திடம் பேசிய பாதாம் குடும்பத்தைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணா, “தேர்தலின்போது அனைவரும் சேர்ந்து ஒன்றாக வாக்களிப்பதை முக்கிய குறிக்கோளாக வைத்துள்ளோம்,” என்றார்.

“ஒற்றுமை, நல்லிணக்கம், பிணைப்புக்கு இந்த அணுகுமுறை முக்கிய பங்காற்றுவதாக நாங்கள் நம்புகிறோம். அதனால், நாங்கள் அனைவரும் ஒன்றுகூடி வாக்களிக்கிறோம்,” என்று அவர் கூறினார்.

இதுவரை பத்து பதினைந்து முறை குடும்ப உறுப்பினர்கள் வாக்களித்துள்ளனர் என்றார் கோபாலகிருஷ்ணா.

ஆயிரக்கணக்கான வாக்காளர்கள் கடும் வெப்பத்தையும் பொருட்படுத்தாமல் வந்து வாக்களித்தனர்.

மருத்துவம் படிக்கும் மாணவர் யுவராஜ், “நான் எனது முதல் வாக்கை பதிவு செய்தேன். எனது உரிமையைப் பயன்படுத்தியதற்காக நான் பெருமைப்படுகிறேன். நாட்டின் வளர்ச்சிக்கான பொறுப்புணர்வைக் கொண்டிருக்கிறேன்,” என்று கூறினார்.

குறிப்புச் சொற்கள்