எட்டு ஆண்டுகளுக்கு முன்பு விரலில் வைத்த மை அழியாததால் வாக்குப்போட முடியாமல் மூதாட்டி ஏமாற்றம்

எட்டு ஆண்டுகளுக்கு முன்பு விரலில் வைத்த மை அழியாததால் வாக்குப்போட முடியாமல் மூதாட்டி ஏமாற்றம்

1 mins read
4f56e54a-ddd4-46b5-b0a6-bc6ba2ff2411
எட்டு ஆண்டுகளுக்கு முன்பு வைக்கப்பட்ட கைவிரல் மையைக் காட்டும் மூதாட்டி உஷா. - படம்: ஊடகம்

திருவனந்தபுரம்: கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த தேர்தலின்போது ஒரு மூதாட்டியின் இடது கை ஆள்காட்டி விரலில் வைக்கப்பட்ட மை இன்னும் மறைந்து போகாமல் இருப்பதால், வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 26) நடந்த இரண்டாம் கட்டத் தேர்தலிலும் அவர் வாக்களிப்பதை தவிர்த்துவிட்டார்.

ஏற்கெனவே இரண்டு முறை இதே பிரச்சினையால் அவர் வாக்களிப்பதை தவிர்த்திருந்தார்.

கேரள மாநிலம், சொர்னூர் குளப்புள்ளியைச் சேர்ந்தவர் உஷா, 62. கடந்த 2016ல் கேரள சட்டசபைக்கு நடந்த தேர்தல் வாக்களிப்பின்போது இவரது ஆள்காட்டி விரலில் மை வைக்கப்பட்டது.

ஏறக்குறைய எட்டு ஆண்டுகளாக இந்த மை மறையாமலேயே அவரது விரலில் இருந்து வருகிறது.

இந்நிலையில், கடந்த 2019ல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலிலும் 2021ல் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலிலும் தேவையின்றி பிரச்சினையில் சிக்கிக்கொள்ள வேண்டாம் என நினைத்து வாக்களிப்பதை உஷா தவிர்த்துவிட்டார்.

இப்போது நடந்துள்ள தேர்தலிலும் அவர் வாக்களிக்கச் செல்லாததால், வாக்குப்போட முடியாமல் தான் தொடர்ந்து ஏமாற்றம் அடைந்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

மூதாட்டி உஷாவை வாக்களிக்க வைப்பதற்கு தேர்தல் ஆணையமும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்புச் சொற்கள்