கோல்கத்தா: மேற்கு வங்காளத்தில் 42 மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது.
திரிணாமூல் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் தலைவரும் மேற்கு வங்க மாநில முதல்வருமான மம்தா பானர்ஜி, ஓய்வின்றி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், சனிக்கிழமை அவர் தேர்தல் பிரசாரத்துக்குச் செல்ல ஹெலிகாப்டரில் ஏறும்போது நிலை தடுமாறி விழுந்தார். இதன் காணொளிக் காட்சிகள் வெளியாகியுள்ளது.
அசான்சோல் தொகுதியில் பிரசாரம் செய்ய துர்காபூர் பகுதியிலிருந்து தனி ஹெலிகாப்டர் மூலம் மம்தா பானர்ஜி கிளம்பினார். ஹெலிகாப்டரில் ஏறி இருக்கையில் அமர முயன்றபோது, திடீரென நிலை தடுமாறி ஹெலிகாப்டருக்கு உள்ளேயே தவறி விழுந்தார். உடனே பாதுகாப்பு அதிகாரிகள் உதவிக்கு வந்தனர்.
இந்தச் சம்பவத்தில் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சில நாட்களுக்கு முன்பு தலையில் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மம்தா பானர்ஜி, மருத்துவ சிகிச்சைக்கு பின்னர் தேர்தல் பிரசாரத்திற்கு கிளம்பியது குறிப்பிடத்தக்கது.