திருப்பதி: தெலுங்கு தேசக் கட்சியின் தேர்தல் பிரசார வாகனம் ஒன்றுக்கு ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில், சிலர் தீ வைத்துவிட்டு தப்பி ஓடினர். அதிர்ஷ்டவசமாக அதில் இருந்த ஓட்டுநர் உயிர் தப்பினார்.
ஆந்திராவில் தொடர்ச்சியாக அரசியல் வன்முறைகள் நிகழ்ந்து வருகின்றன. வேட்பு மனு தாக்கலின்போது ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர், தெலுங்கு தேசம் கட்சியினர் மீது கடுமையாக தாக்குதல் நடத்தினர். வேட்பாளர்கள் சிலர் தங்களுக்குக் கொலை மிரட்டல் வருவதாகவும் தேர்தல் ஆணையத்திடம் புகார் கொடுத்துள்ளனர்.
இந்நிலையில், திருப்பதி அடுத்த வால்மீகிபுரம் மண்டலம், விட்டாலம் எனும் இடத்தில் நேற்று அதிகாலை, சாலையின் ஓரத்தில் தெலுங்கு தேசம் கட்சியின் பிரசார வேனை நிறுத்தி வைத்து, அதில் அதன் ஓட்டுநர் உறங்கிக் கொண்டிருந்தார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர், அவர்கள் பாட்டிலில் கொண்டு வந்த பெட்ரோலை வேனின் மீது ஊற்றி, தீயிட்டுக் கொளுத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடினர். நல்லவேளையாக அந்த வாகனத்தில் உறங்கிக் கொண்டிருந்த ஓட்டுநர் உயிர் தப்பினார்.
தெலுங்கு தேசம் கட்சியினர் சம்பவ இடத்தில் கூடினர். இது ஒய்.எஸ்.ஆர். காங்கிரசாரின் செயல்தான் என கூறி, குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டுமென வலியுறுத்தி பீலேர்-மதனபல்லி நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.