ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தின் நாராயண்பூர், கான்கேர் மாவட்ட எல்லைப் பகுதியில் உள்ள அபுஜ்மத் என்ற வனப்பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கும் நக்சலைட்டுகளுக்கும் இடையே நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இரு பெண்கள் உள்பட ஏழு நக்சலைட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
சம்பவம் நடந்த இடத்தில் இருந்து ஒரு ஏகே 47 துப்பாக்கி உட்பட ஏராளமான ஆயுதங்களும் வெடிமருந்துகளும் கைப்பற்றப்பட்டுள்ளது என்றும் கொல்லப்பட்ட நக்சலைட்டுகளின் அடையாளம் இன்னும் கண்டறியப்படவில்லை என்றும் சம்பந்தப்பட்ட பகுதியில் தேடுதல் பணி இன்னும் நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
அபுஜ்மத் வனப்பகுதி நக்சலைட்டுகளின் கோட்டையாக இருந்து வருவதாகவும் இதனால் அப்பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கும் நக்சலைட்டுகளுக்கும் இடையே அடிக்கடி துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
அந்தவகையில் கடந்த 15 நாட்களில் நக்சலைட்டுகள் மீது பாதுகாப்புப் படையினர் நடத்திய இரண்டாவது பெரிய தாக்குதல் இதுவாகும்.
இந்தச் சம்பவத்துடன் சேர்த்து பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் இந்த ஆண்டு இதுவரை 88 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டுள்ளனர்.