போபால்: மத்தியப் பிரதேசத்தில் ஆசிரமத்தில் படித்துவந்த 19 சிறுவர்களுக்குப் பாலியல் தொந்தரவு அளித்ததாக ஆசிரியர் உள்ளிட்ட இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து உஜ்ஜைன் காவல்துறை உயர் அதிகாரி பிரதீப் சர்மா கூறியபோது, மாநில சமஸ்கிருத வாரியத்துடன் இணைக்கப்பட்ட உஜ்ஜைன் ஆசிரமத்தில் ஏழைக் குழந்தைகள் படித்து வருகின்றனர். இதில் ஒரு சிறுவன், தான் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாவதாக சில நாள்களுக்கு முன் தன் தாயிடம் தெரிவித்துள்ளான்.
இதேபோல், மேலும் மூன்று சிறுவர்கள் தங்கள் இது குறித்து தங்கள் பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். அதனையடுத்து ஆசிரமத்திற்கு அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தினர். அதன் அடிப்படையில் அந்த ஆசிரமத்தின் ஆசிரியர் ராகுல் சர்மா (21), ஆசிரமப் பராமரிப்பாளர் அஜய் தாக்குர் ஆகியோர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். முதற்கட்ட விசாரணையில் கிட்டத்தட்ட 19 சிறுவர்கள் பாலியல் தொந்தரவுக்கு ஆளாகியிருப்பது தெரியவந்துள்ளது.
இந்த பாலியல் குற்றச்சாட்டை ஆசிரம அதிகாரி கஜானந்த் மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “பெற்றோர்கள் ஆசிரமத்துக்கு வந்து தகராறு செய்ததால் எங்களுக்கு உதவவே காவல்துறை அதிகாரிகளை அழைத்தோம். ஆனால், அவர்கள் எங்கள் ஊழியர்கள் மீதே வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். எங்கள் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகள் பொய்யானவை,” என்றார்.
2023ஆம் ஆண்டில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட இளம் பெண் ஒருவர் ரத்தப் போக்குடன் கிழிந்த ஆடைகளுடன் தெருவில் உதவி கோரிய காணொளிக் காட்சிகள் வெளியாகின.
அந்தப் பெண் உதவி கேட்டு ஒரு மணி நேரம் சுற்றி அலைந்த போதும் அவரை யாரும் கண்டுகொள்ளவில்லை. அதற்குப் பதிலாக அந்தப் பெண்ணை விரட்டியடித்தனர்.
அப்போது, உஜ்ஜைனி ஆசிரமத்தில் பணிபுரிந்து வந்த ராகுல் சர்மாதான் அந்தப் பெண்ணுக்கு உதவியதாக கூறப்படுகிறது. தற்போது அவர்தான் பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

