லக்னோ: இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம், ஆக்ராவில் பள்ளிக்கு தாமதமாக வந்ததாகக் கூறப்படும் சம்பவம் ஒன்றில் ஆசிரியர் ஒருவரை அப்பள்ளி முதல்வர் அடிப்பதைக் காட்டும் காணொளி இணையத்தில் பரவி வருகிறது.
கஞ்சன் சௌத்ரி எனும் அந்த ஆசிரியரை அடித்தது மட்டுமல்லாமல், சண்டையில் தமது உடையை அவர் கிழிக்க முற்பட்டதாகவும் குற்றஞ்சாட்டினார்.
நாற்காலியில் அமர்ந்திருந்த அந்த ஆசிரியரின் குர்தாவைப் பிடித்து அப்பள்ளி முதல்வர் அடிப்பதைக் காணொளியில் பார்க்க முடிந்தது. தொடக்கத்தில் அவர்களைச் சண்டையிலிருந்து விலக்கிவிட முற்பட்ட அப்பள்ளி முதல்வரின் வாகன ஓட்டுநர், பின்னர் அந்த ஆசிரியருடன் சண்டையிட்டார்.
காணொளியில் பின்னணியில் பேசிய ஒருவர், “இது படமெடுக்கப்படும். மேடம் மிகவும் முரட்டுத்தனமாக நடந்துகொள்கிறீர். இது உங்களுக்கு ஏற்ற நடப்பா?,” என்று கூறுவதைக் கேட்க முடிந்தது.
சண்டையின்போது அப்பள்ளி முதல்வரும் ஆசிரியரும் ஒருவரை ஒருவர் தகாத சொற்களால் திட்டினர்.
“உனக்கு தைரியம் இருந்தால் என்னை அடி. உன்னாலும் உன் ஓட்டுநராலும் என்ன செய்ய முடியும்?” என்று அந்த ஆசிரியர் கூறுவதைக் கேட்க முடிந்தது.
இச்சம்பவத்தில் அந்த ஆசிரியருக்குக் காயம் ஏற்பட்டதாகத் தெரிகிறது. அவருக்கு எதிராக அப்பள்ளி முதல்வர் காவல்துறையிடம் புகார் அளித்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
இருவரின் சண்டையைக் காட்டும் அந்தக் காணொளி 4,000க்கும் மேற்பட்ட பார்வைகளைப் பெற்றுள்ளது.