புதுடெல்லி: இந்திய அரசாங்கம், சனிக்கிழமை (மே 4) வெங்காய ஏற்றுமதிக்கான தடையை நீக்கியுள்ளது.
இந்திய மக்களவைத் தேர்தலில் அடுத்தகட்டமாக மகாராஷ்டிர மாநிலத்தில் வாக்குப்பதிவு நடைபெறவிருக்கும் நிலையில் வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடை விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளது.
வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் வெளியிட்ட அறிக்கையில், குறைந்தபட்ச ஏற்றுமதி விலை ஒரு டன் வெங்காயத்துக்கு 550 டாலராக நிர்ணயிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கடுமையான விலையேற்றத்தைக் கட்டுப்படுத்தும் வகையில், ஏற்றுமதிக்குத் தடை விதிக்கப்பட்ட பொருள்களின் பட்டியலில் வெங்காயம் சேர்க்கப்பட்டிருந்தது. இந்நிலையில், பங்ளாதேஷ், இலங்கை, ஐக்கிய அரபுச் சிற்றரசுகள் போன்ற நாடுகளின் கோரிக்கையை ஏற்றுச் சில நாடுகளுக்கு மட்டும் வெங்காய ஏற்றுமதியை இந்தியா அனுமதித்தது.
உள்நாட்டில், மகாராஷ்டிரா உட்பட நாட்டின் பல பகுதிகளைச் சேர்ந்த வெங்காய வணிகர்கள் பலர், வெங்காய ஏற்றுமதிக்கான தடையை நீக்கக் கோரித் தொடர்ந்து குரல் எழுப்பி வந்தனர். அவ்வாறு தடை நீக்கப்பட்டால், வெங்காய விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்க அது உதவும் என்று வலியுறுத்தப்பட்டது. ஆனால், மத்திய அரசு அதற்குச் செவிசாய்க்கவில்லை.
கடந்த மாா்ச் 31ஆம் தேதி வரை வெங்காய ஏற்றுமதிக்குத் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், அண்மையில் அதை மேலும் நீட்டிப்பதாக டிஜிஎஃப்டி அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆனால், மகாராஷ்டிராவில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெறவிருக்கும் நிலையில் வெங்காய ஏற்றுமதித் தடையை நீக்குவதாக மத்திய அரசாங்கம் இப்போது அறிவித்துள்ளது.