புதுடெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி உத்தரப் பிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியில் கடந்த வெள்ளிக்கிழமையன்று (மே 3) வேட்பு மனு தாக்கல் செய்தார்.
இந்நிலையில், ராகுல் காந்தியின் வேட்பு மனுவை நிராகரிக்க கோரி ரேபரேலி தொகுதி தேர்தல் அதிகாரியிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. அனிருத் பிரதாப் சிங் என்பவர் சார்பில் வழக்கறிஞர் அசோக் பாண்டே என்பவர் இந்தப் புகார் மனுவை அளித்துள்ளார்.
அந்தப் புகார் மனுவில், “அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் 2 ஆண்டு சிறைத் தண்டனைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடைதான் விதித்துள்ளது. இந்த வழக்கில் எந்த இறுதி தீர்ப்பும் வழங்கவில்லை. 2 ஆண்டு சிறைத் தண்டனை பெற்றவர்கள் தேர்தலில் போட்டியிடும் தகுதியை இழந்துவிடுகிறார்கள்,” என வழக்கறிஞர் பாண்டே குறிப்பிட்டிருந்தார்.
“இரண்டாவதாக கடந்த 2006ஆம் ஆண்டு தனது குடியுரிமை பற்றி ராகுல் காந்தி கூறும் போது, தான் ஒரு பிரிட்டிஷ் நாட்டவர் என்று குறிப்பிட்டிருக்கிறார். பிரிட்டிஷ் குடிமகனாக இருப்பவர் சட்டப்படி இந்தியத் தேர்தலில் போட்டியிட முடியாது. எனவே, ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி தாக்கல் செய்துள்ள வேட்பு மனுவை நிராகரிக்க வேண்டும்,”எனத் தேர்தல் அதிகாரியிடம் வழங்கிய புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளதாக பாண்டே தெரிவித்தார்.
தனது புகாரைத் தேர்தல் ஆணையம் ஏற்றுகொண்டுவிட்டதாக அவர் கூறினார்.
இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் அஜய் பால் சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘இதற்கு முன்பும் ராகுல் காந்தி தாக்கல் செய்த வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. இந்த முறையும் அவரது வேட்பு மனு தகுதியானதுதான். அத்துடன், புகார் அளிப்பதற்கான கால கெடு முடிந்த பிறகு ராகுல் காந்திக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்துள்ளார்.