ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநில கிராமப்புற வளர்ச்சித்துறை அமைச்சரின் உதவியாளர் வீட்டில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையில் 20 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
அம்மாநில கிராமப்புற வளர்ச்சித்துறை அமைச்சராக ஆலம்கிர் ஆலம் பதவி வகிக்கிறார். கிராமப்புற வளர்ச்சித்துறை சார்பில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களில் பணமோசடி நடந்ததாக புகார் எழுந்ததுள்ளது. இது தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது.
இந்நிலையில், பணமோசடி வழக்கு தொடர்பாக அமைச்சர் ஆலம்கிர் ஆலமின் உதவியாளர் சஞ்சீவ் லாலின் வீடு உள்பட பல்வேறு இடங்களில் திங்கட்கிழமையன்று ( மே 6) அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். இந்தச் சோதனையில் சஞ்சீவ் லாலின் வீட்டில் இருந்து 20 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ள காணொளிக் காட்சிகள் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கிராமப்புற வளர்ச்சித்துறை தலைமை பொறியாளர் வீரேந்திர ராம் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. ஐந்து நாள்கள் விசாரணைக்குப் பிறகு அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.