பெங்களூர்: கர்நாடக மாநிலத்தின் தலைநகரான பெங்களூரில் தொடர் மழையைத் தொடர்ந்து, பெங்களூருவுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் புதன்கிழமை மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. மஞ்சள் எச்சரிக்கையானது பலத்த காற்றுடன் கூடிய கனமழைக்கான சாத்தியத்தை குறிக்கிறது. தொடர் மழையால் பெங்களூரு நகரின் பல்வேறு பகுதிகள் நீரில் தத்தளிக்கின்றன.
பெங்களூரில் கடந்த திங்கள்கிழமை பெய்த கனமழையால் பெங்களூரின் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. பல இடங்களில் சாலையோர மரங்கள் வேரோடு பெயர்ந்து விழுந்தன. பெங்களூரு விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டிய 8 விமானங்கள் மழை காரணமாக வேறு நகரங்களுக்குத் திருப்பிவிடப்பட்டன.
இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் பெங்களூரு போக்குவரத்துக் காவல் துறையினர், போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள முக்கிய பகுதிகள் குறித்து குடிமக்களுக்குத் தெரிவித்து வருகின்றனர். பெங்களூரின் பல பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், பெங்களூரில் பெய்து வரும் மழை தீவிரமடையலாம். அடுத்த 36 மணி நேரங்களில் மிதமானது முதல் இடியுடன் கூடிய கனமழை பெய்யலாம் என்று வானிலை நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பெங்களூரில் கடந்த மாதம் முழுக்கவே வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்து வந்தது. 38 டிகிரி செல்சியசுக்கும் அதிகமாகவே வெப்பம் பதிவாகி வந்தது. பெங்களூரில் ஆகஅதிகமாக 41.3 டிகிரி செல்சியஸ் வெய்யில் பதிவாகியுள்ளது. கடந்த சில நாள்களாகவே மழை பெய்து வரும் நிலையில், வெப்பம் குறைந்து வருகிறது.
அடுத்த ஒரு வாரத்துக்கு வானம் மேகமூட்டத்துடன் இருக்கும், பல இடங்களில் கன மழை பெய்யும் வாய்ப்புள்ளது என்றும் இந்திய வானிலை ஆய்வு நிலையம் கணித்துள்ளது.
மே மாதத்தில் பெங்களூருவில் மழைப்பொழிவு சராசரியாக 128.7 மி.மி. ஆக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு சராசரி மழையை பெங்களூரு பெறும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. மஞ்சள் எச்சரிக்கை கொடுக்கப்பட்டிருக்கும் நிலையில் மக்கள் தேவை இன்றி வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.