போபால்: இந்தியாவில் செவ்வாய்க்கிழமை (மே 7) அன்று நாடாளுமன்றத் தேர்தலின் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
உத்தரப் பிரதேசம், குஜராத், பீகார், அசாம், சத்தீஸ்கர்ர், கோவா, மராட்டியம், கர்நாடகா உள்ளிட்ட 10 மாநிலங்களில் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
இந்நிலையில் மத்தியப் பிரதேச மாநிலம் பெதுல் மாவட்டத்தில் உள்ள கோலா கிராமத்தில் வாக்குகள் பதிவான எந்திரங்களை ஊழியர்கள் பேருந்து மூலம் வாக்கு எண்ணும் நிலையத்திற்கு எடுத்து சென்றனர்.
இரவு 11 மணியளவில் திடீரென அவர்கள் சென்ற பேருந்து தீப்பிடித்து எரிந்தது. உடனடியாக பேருந்தில் இருந்து அனைவரும் வெளியேறியதால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.
ஆனால் பேருந்தில் இருந்த 4 வாக்குப்பதிவு எந்திரங்கள் முற்றிலும் எரிந்து சேதமானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது விபத்தா அல்லது யாரேனும் வேண்டும் என்றே இச்சம்பவத்தை நடத்தினார்களா என்று பல்வேறு கோணங்களில் காவல்துறை விசாரணை நடத்துகிறது.