குல்காம்: ஜம்மு - காஷ்மீரின் தெற்கே உள்ள குல்காம் மாவட்டத்தில் ரெட்வானி பயீன் பகுதியில் இந்தியப் பாதுகாப்புப் படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஒரு பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை இதே பகுதியில் நடந்த மற்றொரு துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
பயங்கரவாதியை அடையாளம் காணும் பணியை அதிகாரிகள் மேற்கொண்டு வருவதாக இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டன.
காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் கடந்த 4ஆம் தேதி எல்லை கடந்து வந்ததாக சந்தேகிக்கப்படும் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.
அதில் இந்திய விமானப் படை அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டார். 4 பேர் காயமடைந்தனர்.
இதனைத் தொடர்ந்து, காஷ்மீர் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பதுங்கியிருக்கும் பயங்கரவாதிகளைத் தேடும் பணியையும் அதிகாரிகள் தீவிரப்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில் அனந்த்நாக் - ரஜோரி தொகுதியில் மே 25ஆம் தேதி நடத்தப்படும் நாடாளுமன்றத் தேர்தலுக்கும் பாதுகாப்பு நடவடிக்கைகள் வலுப்படுத்தப் பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

