ஹைதராபாத்: ஆந்திர மாநிலத்தில் 175 சட்டமன்றத் தொகுதிகளுக்கும், 25 மக்களவைத் தொகுதிகளுக்கும் நேற்று (13.5.24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. கடந்த சில வாரங்களாக ஆந்திரத் தேர்தலின் வெற்றி, தோல்வியை முன்னிறுத்தி அம்மாநிலம் முழுவதும் பெரிய அளவிலான பந்தயப் பிடிப்புகள் நடந்து வருவதாகக் கூறப்படுகிறது.
ஆயிரம், இரண்டாயிரத்தில் இருந்து கோடிக்கணக்கான ரூபாய் வரை பந்தயம் பிடிக்கப்படுகிறது. சிலரோ வீட்டு மனை, நிலம், வீடு, வாகனங்கள், தங்க நகைகள் உள்ளிட்டவற்றை பந்தயம் கட்டி வருகின்றனர்.
குறிப்பாக நடிகர் பவன் கல்யாண் போட்டியிடும் பிட்டாபுரம், சந்திரா பாபு நாயுடுவின் மகன் லோகேஷ் போட்டியிடும் மங்களகிரி, சந்திரபாபு நாயுடு போட்டியிடும் குப்பம், ரோஜா போட்டியிடும் நகரி, பாலகிருஷ்ணா போட்டியிடும் இந்துப்பூர் ஆகிய தொகுதிகளிலும் மேலும் நெல்லூர், தர்மாவரம், குண்டூர், குடிவாடா, கன்னாவரம், விஜயவாடா, சீராலா, நத்தன பல்லி, ஆள்ளகட்டா, கடப்பா என பிரபலங்கள் போட்டியிடும் தொகுதிகளிலும் கோடிக் கணக்கில் பந்தயங்கள் நடத்தப்படுவதாகக் கூறப்படுகிறது.