ஐஸ்வால்: மிசோரம் மாநிலத்தின் ஐஸ்வால் பகுதியில் உள்ள ஒரு தொடக்கப்பள்ளியில் கல்வி பயில வியப்பூட்டும் விதத்தில் எட்டு இரட்டைக் குழந்தைகள் புதிதாகச் சேர்ந்துள்ளனர். சமூக ஊடகங்களில் பரவி வரும் குழந்தைகளின் புகைப்படம் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
இதுகுறித்து அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் லால்வென்ட் லுங்கா கூறுகையில், “எங்கள் பள்ளியில் கடந்த கல்வியாண்டிலும் வெவ்வேறு வகுப்புகளில் நான்கு ஜோடி இரட்டைக் குழந்தைகள் கல்வி பயின்றனர். ஆனால், இந்த ஆண்டு அந்த எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது. எட்டு ஜோடி இரட்டையர்கள் கல்வி பயில ஆர்வம் காட்டியுள்ளனர். இவர்களில் 4 ஜோடி பெண் குழந்தைகளும் 3 ஜோடி ஆண் குழந்தைகளும் அடங்குவர். கூடுதல் சுவாரஸ்யமாக எனது இரட்டைக் குழந்தைகளான மகன் ரெம்ருதிகா, மகள் லால்சார்ஜோவி ஆகியோரும் இப்பள்ளியில் படிக்க உள்ளனர்,” என்றார்.

