புதுடெல்லி: டெல்லியில் காங்கிரஸ் வேட்பாளர் கன்னையா குமார் தாக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லியில் மே 25-ம் தேதி நாடாளுமன்றத் தேர்தலுக்கான 6வது கட்ட வாக்குப் பதிவு நடைபெறுகிறது. வடகிழக்கு டெல்லியில் காங்கிரஸ் சார்பில் கன்னையா குமார் களம் காண்கிறார்.
இவரை எதிர்த்து பா.ஜ.க. சார்பில் 2 முறை எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்ட மனோஜ் திவாரி போட்டியிடுகிறார். இரு கட்சியினரும் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு தீவிரமாக வாக்கு சேகரித்து வருகின்றனர்.
இந்நிலையில், தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த கன்னையா குமார் மீது சிலர் தாக்குதல் நடத்தும் காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
டெல்லி நியூ உஸ்மான்பூர் பகுதியில் உள்ள ஆம் ஆத்மி அலுவலகம் அருகே பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தபோது அடையாளம் தெரியாத நபர்களால் கன்னையா குமார் தாக்கப்பட்டதாக உடனிருந்த ஆம் ஆத்மி கவுன்சிலர் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.
அதில், சில நபர்கள் கன்னையா குமாருக்கு மாலை அணிவித்ததாகவும், அதன்பிறகு அவர்கள் கன்னையா மீது மையைப் பூசி அவரைத் தாக்க முயன்றதாகவும் அந்தப் புகாரில் கூறப்பட்டுள்ளது.

