புதுடெல்லி: தோசை, சோலா பூரி, பாவ் பாஜி ஆகிய இந்திய உணவுகள் வெகுவாகப் பிடிக்கும் என்று கூறியிருந்த சுந்தர் பிச்சையிடம் தமிழகத்தில் பிறந்த உங்களுக்குத் தமிழர்கள் உணவு பிடிக்காதா? என சமூக ஊடகங்களில் வலைத்தளவாசிகள் கேள்வி கேட்டு வருகின்றனர்.
கூகல் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக விளங்கும் சுந்தர் பிச்சை அண்மையில் தனக்குப் பிடித்த உணவு வகைகள் குறித்து வட இந்தியாவின் பிரபலமான யூடியூபர் வருண் மய்யாவுக்குப் பேட்டி அளித்திருந்தார்.
அதில், “பெங்களூரில் தோசையும் டெல்லியில் சோலா பூரியும் மும்பையில் பாவ் பாஜியும் சாப்பிட மிகவும் பிடிக்கும்,” என்று தெரிவித்தார்.
சுந்தர் பிச்சையின் இந்தப் பேட்டி இப்போது இணையத்தில் பரவி வரும் சூழலில், “பெங்களூரு, டெல்லி, மும்பை என இந்திய மாநகரங்களின் உணவுகளை மெச்சிப் பாராட்டியுள்ள சுந்தர் பிச்சை, அவர் பிறந்து வளர்ந்த தமிழகத்தின் சிறப்புமிக்க உணவுவகைகளில் ஒன்றைக்கூட குறிப்பிடாமல் விட்டுவிட்டது ஏன்?” என்று தங்கள் வருத்தத்தை வலைத்தளவாசிகள் பகிர்ந்துள்ளனர்.
1972ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் மதுரையில் பிறந்து சென்னையில் வளர்ந்த சுந்தர் பிச்சைக்கு தமிழர் உணவுகள் பிடிக்காதா அல்லது தமிழகத்தை அவர் மறந்துவிட்டாரா என்றும் வினவி வருகின்றனர்.
அதே பேட்டியில், “விஷயங்களை ஆழமாகப் புரிந்துகொள்வதன் மூலம் உண்மையான வெற்றி கிடைக்கும்,” என்று கூறியுள்ள அவர், “பல இந்திய மாணவர்கள் புத்திசாலித்தனமாக இருந்தாலும் அடிப்படை விஷயங்களில் கவனம் செலுத்தாமல் கோட்டை விட்டுவிடுகின்றனர்,” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

