புனே: மகாராஷ்டிர மாநிலம், புனேயில் 17 வயது சிறுவன் ஒருவன் அண்மையில் மதுபோதையுடன் சொகுசு காரை ஓட்டி மோட்டார் சைக்கிள் வாகனத்தின் மீது மோதி விபத்தை ஏற்படுத்தினான். இந்த விபத்தில் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரிந்து வந்த இருவர் கொல்லப்பட்டனர்.
இந்தச் சம்பவத்தில் சிக்கிய சிறுவனைக் காப்பாற்ற அவனது ரத்த மாதிரியை மாற்றிக் கூறும்படி மருத்துவர்களுக்கு 3 லட்ச ரூபாய் லஞ்சம் கொடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சிறுவனின் ரத்த மாதிரிகளை மாற்றிய விவகாரத்தில் சசூன் மருத்துவமனையின் மருத்துவர் அஜய் தாவார், மருத்துவர் ஹரி ஹல்னர், அவர்களுடைய உதவியாளர் என மூவரைப் புனே குற்றப்பிரிவு காவலர்கள் கைது செய்தனர். இவர்கள் மூவரும் மே 30 வரை காவலில் இருப்பர்.
“விபத்து நடந்த நாளன்று தொழிலதிபராக விளங்கும் சிறுவனின் தந்தை மருத்துவர் தாவாரை தொலைபேசியில் அழைத்து, சிறுவனின் ரத்த மாதிரிகளை மாற்றிவிட்டால் லட்சக்கணக்கில் பணம் தருவதாகக் கூறியுள்ளார். இதையடுத்து சிறுவனின் ரத்த மாதிரியைத் தூக்கி குப்பைத்தொட்டியில் போட்டுவிட்டு, அதற்குப் பதிலாக தாவார் கொடுத்த ரத்த மாதிரியை வைத்துள்ளனர்.
“சிறுவன் விபத்தை ஏற்படுத்தியபோது மது அருந்தி இருந்ததை மறைக்கவே இப்படிச் செய்துள்ளனர். மருத்துவர் தாவாரின் அறிவுறுத்தலின் பேரில் மருத்துவர் ஹரி ஹல்னர் ரத்த மாதிரிகளை மாற்றியது தெரியவந்தது. இதையடுத்து அவர்களைக் கைது செய்துள்ளோம்,” என்று புனே ஆணையர் அமிதேஷ் குமார் கூறியுள்ளார்.

