மும்பை: சமூக ஊடகங்களில் பிரபலமடைவதற்கு அதிகமான பயணிகளை ஏற்றிச் செல்லும் மின்சார ரயில்களிலும் மக்கள் அதிகம் கூடும் பொது இடங்களிலும் ஆபாசமாக நடனமாடி காணொளியாகப் பதிவு செய்து சமூக ஊடகங்களில் பரவ விடும் போக்கு மும்பையில் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் மும்பை மின்சார ரயில் மற்றும் சி.எஸ்.எம்.டி. ரயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் பெண் ஒருவர் ஆபாசமாக ஆடை அணிந்து நடனமாடும் காணொளி தற்போது சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது. அந்தக் காணொளியில் பெண் ஒருவர் போஜ்புரி மொழிப் பாடலுக்கு மின்சார ரயிலில் நடனமாடுகிறார்.
அந்தக் காணொளி குறித்து இணையவாசி ஒருவர், “மும்பையில் மின்சார ரயிலில் பயணிகள் நிம்மதியாகப் பயணம் செய்ய முடியவில்லை. வியாபாரிகள் ஒரு பக்கம் என்றால் பிச்சைக்காரர்கள் மற்றொரு பக்கம் தொந்தரவு கொடுத்துக் கொண்டுதான் உள்ளனர். அதுபோதாதென அந்த வரிசையில் இப்போது சமூக ஊடகத்தில் பிரபலமடைவதற்காக காணொளி எடுப்போரும் சேர்ந்துகொண்டுள்ளனர் என்று பதிவிட்டுள்ளார்.
அந்தக் காணொளி குறித்து அறிந்த மும்பை ரயில்வே கோட்ட மேலாளர், இதை மும்பை ரயில்வே காவல்துறையின் கவனத்திற்குக் கொண்டு சென்றதாகக் கூறப்படுகிறது. அந்தப் பெண்ணை காவல்துறை வலைவீசி தேடி வருகிறது.

