கோல்கத்தா: இந்திய மக்களவைத் தேர்தலின் 7ஆம் கட்ட வாக்குப் பதிவு நாளான சனிக்கிழமையன்று (ஜூன் 1) மக்கள் வாக்களித்து வருகின்றனர்.
வாக்களிப்பின் இறுதிக் கட்டத்தில் 57 மக்களவைத் தொகுதிகளுக்கான உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க மக்கள் வாக்களிக்கின்றனர்.
ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடத்தப்படும் தேர்தலில் கிட்டத்தட்ட ஒரு பில்லியன் பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
ஜூன் 1ஆம் தேதி, எட்டு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 100 மில்லியனுக்கும் அதிகமானோர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதாகக் கூறப்பட்டது. பஞ்சாப், பீகார், மேற்கு வங்கம், ஒடிசா போன்றவையும் அவற்றில் அடங்கும்.
வாக்காளர்கள் பெருந்திரளாக வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்ட இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஒன்றிணைந்து நாட்டை மேலும் ஒளிபொருந்தியதாக மாற்ற அழைப்பு விடுத்தார்.
பிரதமர் மோடியின் ஆளும் பாரதிய ஜனதாக் கட்சிக் கூட்டணியை எதிர்த்து காங்கிரஸ் கட்சித் தலைமையிலான ‘ஐஎன்டிஐஏ’ கூட்டணி களமிறங்கியுள்ளது.
காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் பிரதமர் மோடியும் அவரவர் தரப்பு வெல்லும் என்றும் எதிர்த்தரப்பு படுதோல்வி அடையும் என்றும் முன்னுரைத்துள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
திரு மோடி தமது சாதனைகளைப் பட்டியலிட்டுத் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட வேளையில் அவரது சர்வாதிகார ஆட்சியிலிருந்து நாட்டைக் காக்கவேண்டும் என்று எதிர்த்தரப்பு பிரசாரம் செய்தது.
விறுவிறுப்பான இந்த ஏழு கட்டத் தேர்தலின் முடிவுகள் ஜூன் 4ஆம் தேதி வெளியிடப்படும்.