புவனேஸ்வர்: ஒடிசா மாநிலத்தின் புகழ்பெற்ற பொம்மலாட்டத்தின் முன்னோடியான மகுனி சரண் குவான் தனது 88வது வயதில் சனிக்கிழமை காலமானார். மகுனி சரன், தனித்துவமான கம்பிப் பொம்மலாட்டம் மற்றும் நூற்றுக்கணக்கான நடன கதாபாத்திரங்கள் மற்றும் எழுத்துகளைச் சேர்த்துப் பொம்மலாட்டம் வழி கதை சொல்வது போன்றவற்றில் கைதேர்ந்த கலைஞர்.
கியோஞ்சர் மாவட்டத்தில் பிறந்த மகுனி சரண் ஒரு கைவினைக் கலைஞர், கம்பிப் பொம்மைகளை தயாரிப்பது மட்டுமின்றி, பொம்மலாட்டத்திற்கு அவரே கதை, வசனம் எழுதி பின்னணிக் குரல் கொடுத்து வந்தார்.
புராணங்கள் முதல் அரசாங்கத் திட்டங்கள், சமூகப் பிரச்சினைகள் என அனைத்தையும் தனது கதைக்குள்ளும் கதாபாத்திரங்களுக்குள்ளும் அடக்கும் திறமை படைத்தவர்.
வறுமை, கல்வி வாய்ப்பின்மை உள்ளிட்ட எண்ணற்ற சவால்கள் இருந்தபோதிலும், மகுனி சரண் மனம் தளராமல் பொம்மலாட்டத் துறையில் சிறந்து விளங்கி இந்தியக் கலை மற்றும் கலாசாரத் துறைக்கு பெரும் பங்காற்றியுள்ளார். மகுனி சரண் குவானைப் பாராட்டி 2023ஆம் ஆண்டில் இந்திய அரசு அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தது.

