மும்பை: பாலிவுட் நடிகர் சல்மான் கானை கொலை செய்ய நோட்டமிட்டதாக லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலைச் சேர்ந்த நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர் என நவி மும்பை காவல்துறை தெரிவித்துள்ளது.
கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி மும்பையின் பந்த்ரா பகுதியில் உள்ள சல்மான் கானின் அடுக்குமாடி குடியிருப்புக்கு முன்பு 5 முறை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய விக்கி குப்தா மற்றும் சாகர் பால் ஆகியோரை 48 மணி நேரத்தில் மும்பை காவல்துறை கைது செய்தது.
இதையடுத்து ஏப்ரல் 26ஆம் தேதி துப்பாக்கிச்சூடு நடத்தியவர்களுக்கு துப்பாக்கிகளை வழங்கியதாக அனுஜ் தபன் மற்றும் சோனு சுபாஷ் சுந்தர் ஆகியோர் பஞ்சாப்பில் கைது செய்யப்பட்டனர்.
இந்தச் சம்பவத்தின் தொடர்ச்சியாக சல்மான் கானை கொலை செய்ய திட்டமிட்டிருந்ததாக, லாரன்ஸ் பிஷ்னோயின் கும்பலைச் சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று நவி மும்பை காவல்துறை தெரிவித்துள்ளது.
“பிஷ்னோய் லாரன்ஸ் கும்பலைச் சேர்ந்தவர்கள் பன்வெல் - கலம்போலி பகுதியில் வசிப்பதாகவும், பந்த்ராவில் உள்ள சல்மான் கானின் வீடு, பன்வெல்லில் உள்ள அவரது பண்ணை வீடு மற்றும் சல்மான் கான் படப்பிடிப்பு இடம்பெறும் பகுதிகள் உள்ளிட்ட இடங்களை கண்காணித்து வருவதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது,” என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.