சிக்கிம்: மக்களவைத் தேர்தலுடன் சட்டப் பேரவைத் தேர்தலும் சிக்கிம், அருணாச்சலப் பிரதேச மாநிலங்களில் நடைபெற்றது. இவ்விரு மாநிலங்களிலும் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குகள் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 2) எண்ணப்பட்டு முடிவுகள் வெளிவந்தன.
அருணாச்சலப் பிரதேசத்தில் அறுதிப் பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சி அமைக்கிறது. இதேபோல், சிக்கிம் மாநிலத்தில் ஆளும் எஸ்கேஎம் கட்சி பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்கிறது.
543 தொகுதிகளைக் கொண்ட இந்திய நாடாளுமன்றத்துக்கு நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அன்றே அறிவிக்கப்படுகின்றன.
ஆனால், சிக்கிம், அருணாச்சலப் பிரதேசம் ஆகிய இவ்விரு மாநிலப் பேரவைகளின் பதவிக்காலம் ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைவதால், முன்கூட்டியே இங்கு வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.
சிக்கிம் தேர்தல் முடிவுகள்:
சிக்கிமில் ஆளும் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சி, மொத்தமுள்ள 32 தொகுதிகளில் 31ல் வெற்றிபெற்றுள்ளது.
எதிர்க்கட்சியான சிக்கிம் ஜனநாயக முன்னணி ஒரு இடத்தில் மட்டும் வெற்றிபெற்றிருந்தது.
இதுகுறித்து சிக்கிம் முதல்வர் பிரேம் சிங் தமாங் செய்தியாளர்களிடம் கூறுகையில், “சிக்கிம் மக்களுக்கும் நமது கட்சியினருக்கும் நன்றி. முழு மனதுடன் மக்களுக்காக உழைத்தோம்.
தொடர்புடைய செய்திகள்
“அதற்கு கைமேல் பலனாகத்தான் நாங்கள் இந்த அபார வெற்றியைப் பெற்றுள்ளோம்,” என்றார்.
அருணாச்சலப் பிரதேச தேர்தல் முடிவுகள்:
அருணாச்சலப் பிரதேசத்தில் பாஜக வேட்பாளர்கள் பத்து பேர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர்.
இந்நிலையில், மாநிலத்தில் மொத்தமுள்ள 60 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 50 இடங்களுக்கான வாக்குகள் எண்ணப்பட்டன.
அதில், பாஜக 46 இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்தது.
பாஜகவின் கூட்டணிக் கட்சியான கான்ராட் சங்மாவின் தேசிய மக்கள் கட்சி ஐந்து இடங்களில் வெற்றிபெற்றது. காங்கிரஸ் ஒரு இடத்திலும் மற்ற கட்சிகள் எட்டு இடங்களிலும் வெற்றிபெற்றன.
போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் மாநில முதல்வர் பெமா காண்டுவும் ஒருவர். தவாங் மாவட்டத்தில் உள்ள முக்டோவில் இருந்து அவர் எம்எல்ஏவாகத் தேர்வாகி இருக்கிறார். இந்தத் தொகுதியில் இதுவரை அவர் நான்கு முறை வெற்றி பெற்றுள்ளார்.
முன்னதாக, அருணாசலப்பிரதேசத்தில் முதல்வர் பெமா காண்டு, துணை முதல்வர் சௌனா மெயின் உட்பட 10 பாஜக வேட்பாளர்களுக்கு எதிராகப் போட்டியிட வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால், அவர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவதாக மாநில தலைமைத் தேர்தல் அலுவலர் பவன் குமார் அறிவித்திருந்தார்.
இந்த மாநிலத் தேர்தல்களில் சிக்கிம் மாநிலத்தில் 79% வாக்குகளும் அருணாச்சலப் பிரதேசத்தில் 82.7% வாக்குகளும் பதிவாகி இருந்தன.
சிக்கிமில் உள்ள ஒரு லோக்சபா தொகுதிக்கும் அருணாச்சலப் பிரதேசத்தின் இரண்டு தொகுதிகளுக்கும் ஜூன் 4ஆம் தேதி, நாட்டின் மற்ற பகுதிகளுடன் சேர்த்து வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

