புதுடெல்லி: மதுபான உரிமம் பெற 100 கோடி ரூபாய் அளவில் ஆம் ஆத்மி கட்சிக்கு லஞ்சம் கொடுத்ததாக சவுத் குரூப்பின் முக்கிய குற்றவாளியாக சந்திரசேகர ராவின் மகள் கே.கவிதா மீது அமலாக்கத்துறை குற்றம்சாட்டியது. இந்த வழக்கு தொடர்பாக கடந்த மார்ச் மாதம் 15ஆம் தேதி அவர் கைது செய்யப்பட்டார். தற்போது நீதிமன்றக் காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த வழக்கில் கவிதாவிற்கு எதிரான குற்றப்பத்திரிக்கை கடந்த மாதம் 29ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட பின்னர் நீதிமன்றம் பிடிவாரண்டுகளைப் பிறப்பித்தது. மேலும் குற்றவாளிகளான இளவரசன், தாமோதர், அரவிந்த் சிங் ஆகிய 3 பேருக்கும் நீதிமன்றம் பிணை வழங்கியது. அமலாக்கத்துறை விசாரணையின்போது குற்றம் சாட்டப்பட்ட மூவர் கைது செய்யப்படாமல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டதால் இவர்களுக்குப் பிணை வழங்கப்பட்டது.
இதனிடையே, இந்த வழக்கு விசாரணை தொடர்பாக கவிதாவின் நீதிமன்றக் காவல் ஜூன் 3ஆம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில், திங்கட்கிழமை ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் நேரில் முன்னிலைப்படுத்தப்பட்டார். அப்போது, சிறப்பு நீதிபதி காவேரி பவேஜா, அவரது காவலை ஜூலை 3ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார்.
இந்த முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ தாக்கல் செய்த இரண்டு வழக்குகளில் கவிதா நீதிமன்றக் காவலில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.