பெங்களூரு: பெங்களூருவில் அதிகபட்சமாக ஹம்பி நகரில் 110.50 மிமீ (மில்லிமீட்டர்) மழை பதிவாகியுள்ளது. அதைத் தொடர்ந்து மாருதி மந்திரா வார்டு (89.50 மிமீ), வித்யாபீட (88.50 மிமீ) மற்றும் காட்டன்பேட் (87.50 மிமீ) பகுதிகளில் அதிக மழை பெய்துள்ளது.
கர்நாடகா கடற்கரைப் பகுதியில் தென்மேற்குப் பருவமழை தொடங்கவுள்ள நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை பெங்களூருவில் கடுமையான இடியுடன் கூடிய கனமழை பெய்துள்ளது. பலத்த காற்றும் வீசியது.
ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு வரை தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக, 133 ஆண்டு காலத்தில் அதிக மழைப்பொழிவு பதிவுசெய்யப்பட்டுள்ளது. 133 ஆண்டுகளில் ஜூன் மாதத்தில் ஒரே நாளில் அதிக மழை பெய்திருக்கிறது. ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு வரை, பெங்களூருவில் 111 மிமீ மழை பெய்துள்ளது. இதுதான் இன்றுவரை ஜூன் மாதத்தில் ஒரே நாளில் பெய்த மிக அதிகமான மழைப்பொழிவு ஆகும்.
பெங்களூருவில் உள்ள இந்திய வானிலை ஆய்வுத் துறை அதிகாரிகளின் தகவல்படி, அதிகபட்சமாக 1891ஆம் ஆண்டு ஜூன் 16ஆம் தேதி ஒரே நாளில் 101.6 மிமீ மழை பதிவானது. பெங்களூருவில் ஜூன் மாத சராசரி மழையளவு 110.3 மிமீ ஆகும். ஆனால், கடைசி இரண்டு நாட்களில் மட்டும் பெங்களூருவில் 120 மிமீக்கு மேல் மழை பதிவாகியுள்ளது.
கர்நாடக மாநில வருவாய்த் துறையின் இயற்கைப் பேரிடர் கண்காணிப்பு மையத்தின் தரவுகளின்படி, பெங்களூருவின் அனைத்துப் பகுதிகளிலும் மிதமான மழை முதல் கனமழை வரை சீராகப் பெய்துள்ளது. பெங்களூருவில் அதிகபட்சமாக ஹம்பி நகரில் 110.50 மிமீ மழை பதிவாகியுள்ளது, அதைத் தொடர்ந்து மாருதி மந்திரா வார்டு (89.50 மிமீ), வித்யாபீட (88.50 மிமீ) மற்றும் காட்டன்பேட் (87.50 மிமீ) பகுதிகளில் அதிக மழை பெய்துள்ளது.
அடுத்த சில நாட்களில் பெங்களூருவில் வானம் மேகமூட்டமாக இருக்கும். மாலை மற்றும் இரவு முழுவதும் பெய்த கனமழையால், பெங்களூரு மக்கள் பெரும் உள்கட்டமைப்பு இன்னல்களுக்கு ஆளானார்கள். பல பகுதிகளில் மாலையில் இருந்து 100க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்தன. 500க்கும் மேற்பட்ட மரங்களின் கிளைகள் முறிந்து விழுந்து சாலைகள், வீடுகள் மற்றும் வாகனங்கள் பலத்த சேதம் அடைந்துள்ளன.
மரங்கள் வேரோடு சாய்ந்ததால் பல பகுதிகளில் மின்சாரக் கம்பிவடங்கள் முறிந்து மின் விநியோகமும் கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
பெங்களூரு மின்சார விநியோக நிறுவனம் (பெஸ்காம்) நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள மின்கம்பங்கள், மின்மாற்றிகள் மற்றும் சேவை நிலையங்கள் கடுமையாக சேதமடைந்திருப்பதாகக் கூறியுள்ளது. ஒருசில பகுதிகளில் மழையால் மின்சாரம் தடைபட்டதால், இரவு முழுவதும் இருளில் இருக்கவேண்டிய நிலை ஏற்பட்டது. பல சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியிருந்ததால், ஞாயிற்றுக்கிழமை போக்குவரத்து குறைவாக இருந்ததால், வாகன ஓட்டிகளுக்கு பாதிப்பு குறைவாகவே இருந்தது.
தொடர்புடைய செய்திகள்
பெங்களூரு - மைசூரு நெடுஞ்சாலையில் வடிகால் வசதி மோசமாக இருப்பதால் ராமநகருக்கு அருகில் உள்ள ஓடைகளில் மழைநீர் தேங்கி போக்குவரத்துக்கு இடையூறாக இருந்தது. சுமார் 3 கிலோமீட்டர் தூரத்துக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, சுமார் ஒரு மணிநேரம் வாகன ஓட்டிகள் காத்திருக்க நேரிட்டது.

