புதுடெல்லி: இந்திய மக்களவைத் தேர்தலின் மூலம் முதல்முறையாக 280 நாடாளுமன்ற உறுப்பினர்கள் (எம்.பி.க்கள்) மக்களவையை அலங்கரிக்க உள்ளனர். இது மொத்த நாடாளுமன்ற உறுப்பினர்களில் 52 விழுக்காடாகும். கடந்த 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் 267 எம்.பி.க்கள் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அப்போது அதுவே அதிக எண்ணிக்கையிலான எம்.பி.க்களாகக் கருதப்பட்டது.
தற்போது மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 263 வேட்பாளர்களும் ஏற்கெனவே மக்களவையில் எம்.பி. பதவி வகித்தவர்களே. கூடுதலாக, 16 பேர் மாநிலங்களவை எம்.பி.க்களாக நியமிக்கப்படவிருக்கிறார்கள். மற்றுமொரு எம்.பி. ஏற்கெனவே மக்களவையில் ஏழு முறை பதவி வகித்தவர். மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்ற எம்.பி.க்களில் 8 பேர் தங்களது முந்தைய தொகுதியிலிருந்து மாறுபட்டு புதிய தொகுதியில் போட்டியிட்டிருக்கிறார்கள். ஒருவர் இரண்டாம் முறையாக இரு தொகுதிகளில் போட்டியிட்டு வென்றிருக்கிறார்.
அதிகபட்சமாக உத்தரப்பிரதேச மாநிலத்தில் 45 பேர் முதல் முறை எம்.பி.க்கள். இவர்களில், மீரட் தொகுதியில் வென்ற ராமாயணம் டிவி சீரியலில் ராமராக நடித்த நடிகர் அருண் கோவில், அமேதியில் ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி ராணியை வென்ற காங்கிரசின் கிஷோரிலால் சர்மா, நகினா தொகுதியில் வென்ற பீம் ஆர்மி தலைவர் அசாத், சமாஜ் கட்சியின் சந்திரசேகர் ஆசாத் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
நடிகர்களில் சுரேஷ் கோபி (திருச்சூர்), கங்கனா ரணாவத் (மண்டி), ஜூன் மாலியா (மெதினிபூர்), சயானி கோஸ் (ஜாதவ்பூர்), ரச்சனா பானர்ஜி (ஹூக்ளி) ஆகியோர் முதல்முறையாக நாடாளுமன்றத்திற்குள் நுழைய உள்ளனர். மாநிலங்களவை எம்.பி.யாக இருந்த அனில் தேசாய் (சிவசேனா உத்தவ் கட்சி), மிசா பாரதி (ஆர்ஜேடி), பூபேந்திர யாதவ், தர்மேந்திர பிரதான், மன்சுக் மாண்டவியா, பிரஷோத்தம் ரூபாலா (பாஜ கட்சியினர்) ஆகியோர் இம்முறை மக்களவையின் புதுமுக எம்.பி.க்களாகி உள்ளனர்.
இதுதவிர கடந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட கட்சியிலிருந்து விலகி கட்சித்தாவல் செய்து இம்முறை வெற்றி பெற்று எம்.பி.யானவர்கள் ஒன்பது பேர். கடந்த ஆட்சியில் அமைச்சர் பதவி வகித்து இம்முறை தேர்தலில் போட்டியிட்ட 53 பேரில் 35 பேர் வாகை சூடியுள்ளனர்.
504 பேர் கோடீஸ்வரர்கள்
மொத்த எம்பிக்களில் 93 விழுக்காட்டினர் அதாவது 504 பேர் கோடீஸ்வரர்கள். இதுவே 2019 தேர்தலில் 88 விழுக்காட்டினர் கோடீஸ்வரர்களாக இருந்தனர். அதிகபட்சமாக குண்டூர் தொகுதி தெலுங்கு தேசம் எம்.பி. சந்திரசேகர் பெம்மாசனி ரூ.5,705 கோடி சொத்துக்கு அதிபதியாக உள்ளார். 42 விழுக்காட்டினர் ரூ.10 கோடிக்கும் அதிகமான சொத்துடையவர்கள். வெறும் 1 விழுக்காட்டினர் சொத்து மதிப்பு மட்டுமே ரூ.20 லட்சத்துக்குக் குறைவாக உள்ளது.
மொத்தம் 41 கட்சிகளில் இருந்து 543 எம்.பி.க்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை 2019ல் 36 ஆக இருந்தது. தேசிய கட்சிகள் சார்பில் 346 பேரும், மாநில கட்சிகள் சார்பில் 179 பேரும், அங்கீகரிக்கப்படாத கட்சிகளில் இருந்து 11 பேரும், சுயேச்சைகள் 7 பேரும் வெற்றி பெற்றுள்ளனர்.

