ஹைதராபாத்: ஆந்திர மாநிலத்தின் புதிய முதல்வராக தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு வரும் புதன்கிழமை (ஜூன் 12) பதவியேற்க உள்ளதாக அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தெலுங்கு தேசம் கட்சியும் முக்கிய இடம்பிடித்துள்ளது.
இந்நிலையில், வரும் புதன்கிழமை மாலை 4.55 மணிக்கு நடைபெறும் சந்திரபாபு நாயுடுவின் பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கூட்டணிக் கட்சிகளின் சார்பில் நரேந்திர மோடி பிரதமராக ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 9) பதவியேற்க உள்ளார்.
ஆந்திரப்பிரதேசத்தின் 175 தொகுதிகளில் தெலுங்கு தேசம் கட்சி பெரும்பான்மையாக 135 இடங்களில் வெற்றிபெற்று ஆட்சி அமைக்கவுள்ளது.
கூட்டணிக் கட்சிகளான ஜனசேனை 21, பாஜக 11 தொகுதிகளில் வென்றுள்ளன.
மக்களவைத் தொகுதிகளிலும் 16 இடங்களைக் கைப்பற்றியுள்ள சந்திரபாபு நாயுடு, தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அமைய முக்கியத் தூணாக உருவெடுத்துள்ளார்.
ஆந்திராவை ஆட்சி செய்து வந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி 11 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்று படுதோல்வி அடைந்தது.

